பக்கம்:தெய்வ அரசு கண்ட இளவரசன்.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தெய்வ அரசு கண்ட இளவரசன்

56

சித்தார்த்தன் கண் விழித்தபோது நள்ளிரவு. அரண்மனை ஆரவாரங்களெல்லாம் அடங்கி அமைதியாகக் காட்சி யளித்தது. எழுந்து மெல்லமெல்ல நடந்து தேர்ப்பாகன் படுத்திருக்கும் இடத்திற்குச் சென்றான்.

"சாணா" சாணா" என்று அவன் அழைத்த குரல் கேட்டு நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த தேர்ப்பாகன் சட்டென்று விழித் தெழுந்தான்.

“சாணா, வெளியே போகவேண்டும். என்னுடைய குதிரையை ஆயத்தப்படுத்து" என்றான் சித்தார்த்தன். அந்த நள்ளிரவு நேரத்தில் அரண்மனையை விட்டு எதற்காகப் போக வேண்டும் என்று சற்றுத் தயங்கினான் தேர்ப்பாகன். சுத்தோதனரின் கட்டளைகள் அவனுக்கு நினைவு வந்தன.

“சாணா, நான் அரண்மனை வாழ்வையே துறக்கப் போகிறேன். இப்பொழுதே புறப்பட வேண்டும். எழுந்திரு. விரைவில் குதிரையை ஆயத்தப்படுத்து" என்று மீண்டும் சித்தார்த்தன் கூறியபோது தேர்ப்பாகன் அதிர்ச்சியடைந்து போனான் என்றே சொல்லவேண்டும்.