கவியரங்குகளில் பாரதிதாசன்
55
புரட்சிக் கவிஞர் தலைமையில், பல இயக்கங்களைச் சேர்ந்த கவிஞர்கள் பத்துப்பேர், பாரதியார்பற்றிக் கவிதை படித்தார்கள்.
தன்மான-திராவிட இயக்கத்தைச் சார்ந்தவர்களாக நானும் கவிஞர் சுரதா அவர்களும் பாரதியார்பற்றிக் கவிதை படித்தோம்.
அடுத்த நிகழ்ச்சியில் சொற்பொழிவாற்ற இருந்த அறிஞர் அண்ணா அவர்கள் முன்னதாகவே கவியரங்கம் தொடங்கும் போதே வந்து, மேடையில் என் அருகிலேயே அமர்ந்து கொண்டார். (பிற்காலத்தில் கூட்டங்களுக்கு நேரங் கழித்து வருவதை ஒரு முறையாக வைத்துக் கொண்ட அறிஞர் அண்ணா அந்த நாட்களில் முன் கூட்டியே வந்துவிடுவார்.)
கவியரங்கம் முடிந்த பிறகு என்னையும் சுரதாவையும் சந்தித்த புரட்சிக் கவிஞர், எவனெவனோ பாரதியாரைப் பற்றி என்னென்னவோ பாடினான். நம் கருத்தைப்பாட நம் ஆட்கள் இல்லையோ என்று கவலைப்பட்டேன். நீங்கள் இரண்டுபேரும் வந்து என் உள்ளத்தில் பாலை வார்த்தீர்கள் என்று பரவசப்பட்டார்.
கோவை பாரதிவிழாவில் பாரதியார்பற்றி நான் பாடிய பாடல் இது.
பாரதியார்
வெட்டரிவாள் போல்முறுக்கி விட்ட மீசை
விழிகளிலே ஒளிபெருக்கும் விரப் பார்வை
கட்டற்ற உரிமைதனை விரும்பும் நெஞ்சம்
கற்பனையில் நனைந்ததமிழ் பாடும் செவ்வாய்