மனிதன் ஒரு விசித்திரமான பிராணி. அவனுக்கு அற்புதமான மனம் இருக்கின்றது; அறிவு இருக்கின்றது. இந்த அறிவைப்பற்றிப் புகழ்ச்சியாகப் பலபடப் பேசுவதுண்டு.
"விலங்குகள் தமது சொந்த அனுபவங்களினால் மட்டும் பயனடையும். ஆனல் மனிதன் தனது சொந்த அனுபவங்களால் மட்டுமல்லாது மற்றவர்களுடைய அனுபவங்கள், அவனுடைய முன்னோர்களுடைய அனுபவங்கள் ஆகியவற்றாலும் பயனடைகிறான். அது அவனுக்கிருக்கும்படியான அறிவின் தனிச் சிறப்பு” என்று பெருமையோடு கூறுவார்கள்.
கொதிக்கின்ற பாலில் வாயை வைத்தால் சுடும் என்று பூனைக்குத் தெரியாது. வாயை அதில் வைத்துத் துன்பப்பட்ட பிறகே அது தெரிந்துகொள்ளும். ஒரு பூனை தெரிந்துகொண்டதென்றால் அதன் குட்டி, அந்தக் குட்டியின் குட்டி ஆகியவைகளும் இந்த அனுபவத்தால் பயனடைய முடியுமா? முடியாது. அவைகளும் தாமாகவே இந்தத் துன்பத்தை அனுபவித்துத்தான் தெரிந்துகொள்ளும். ஒரு தலைமுறையிலுள்ள பூனையின் அனுபவங்களை எழுதி வைத்து அடுத்த தலைமுறையில் வரும் பூனைகளுக்குப் பயன்படச் செய்ய அவற்றால் முடியாது. எழுதி வைக்கவும் முடியாது; மற்றவை அவற்றைப் படித்துத் தெரிந்து