4
தைத் திங்கள்
நாட்டு விழா:
ஒவ்வொரு நாட்டுக்கும் நாட்டு விழா (தேசீய விழா) என ஏதாவது ஒன்று இருக்கும். அது, சமயச் சார்பாக இருக்கலாம், சமூகச் சார்பாக இருக்கலாம்; அரசியல் சார்பாக இருக்கலாம். இன்னும் எவ்வெச் சார்புடையதாகவோ இருக்கலாம். இந்தியப் பெரு நாட்டின் ஓர் உறுப்பாக உள்ள தமிழ் நாட்டைப் பொறுத்தவரையிலும், நாட்டு விழா -தேசீய விழா எனப்படுவது தைப் பொங்கல் விழாவாகும். நாட்டு விழா எனப்படுவது அரை நாளில் அல்லது ஒரு நாளில் முடிந்துவிடக் கூடியதன்று. குறைந்தது ஒரு கிழமை (வாரம்) அளவாயினும் நடைபெறுவதே நாட்டு விழாவாகும். இந்தக் காலத்தில் எடுத்ததற் கெல்லாம் ஒரு வாரம் விழா நடத்துகிறார்களே! அம்மையொழிப்பு வாரம், போலீசு ஒத்துழைப்பு வாரம், குடும்பக் கட்டுப்பாட்டு வாரம் என்றெல்லாம் எத்தனையோ வார விழாக்கள் நடைபெறுவதைக் காண்கிறோம். இவற்றிற்கே ஒரு கிழமைக் காலம் விழாக்கள் நடைபெறுகின்றனவெனில், நம் நாட்டில் அரை நாள்-ஒரு நாள் நடைபெறுகின்ற வேறு விழாக்களை நாட்டு விழாவாக எங்ஙனம் கொள்ள முடியும்?
நம் நாட்டிலே, பொங்கல் விழா அல்லாத வேறு சில விழாக்கள் ஒரு கிழமைக் காலத்திற்கு மேலுங்கூட நடைபெறலாம். ஆனால் அவை, குறிப்பிட்ட சில ஊராராலேயோ, ஒரு வட்டத்தாராலேயோ, ஒரு