பக்கம்:தொழிலியல் விஞ்ஞானி ஜி. டி. நாயுடு.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

27


தனது உறவினர்களுக்குள்ளேயே செல்லம்மாள் என்ற பெண்ணைத் திருமணம் செய்ய நிச்சயம் செய்தார்.

திருமணத்துக்கு நாள் குறித்ததோடு, எல்லா வேலைகளையும் கோபால்சாமி நாயுடுவே முன்னின்று ஓடியாடி செய்ய வேண்டிய நிலை. அதுவும் தாய் இல்லா ஒரே மகன் அல்லவா துரைசாமி? அதனால், எந்தக் கஷ்டங்களையும் ஏற்றுக் கொண்டு அவரே வேலைகளைச் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

திருமண நாளன்று, முகூர்த்த வேளையின்போது, மணமேடையில் மணமகளுக்குத் தாலிகட்டும் நேரம் வந்தபோது, மணமகனை அழைத்தார்கள்.

துரைசாமியைக் காணவில்லை. எல்லா இடங்களிலும் மணமகனைத் தேடினார்கள். பெண் வீட்டாரும், பிள்ளை வீட்டாரும் ஒன்று சேர்ந்து அங்கும், இங்கும் அலைந்து தேடினார்கள். மணமண்டபம் திகைத்தது. முகூர்த்த நேரம் வேறு நெருக்கியது.

இறுதியாக, தனது தோட்ட வீட்டில் துரைசாமி ஒளிந்து கொண்டு, மண வீட்டார் இருவரையும் அலைய விட்டு, ஒடி ஆடி தேட விட்டு, இறுதியாக மணமகன் தோட்ட வீட்டுக்குள்ளேயே பதுங்கியிருந்த, துரைசாமியை மணமகன் குழுவினர் அவரை இழுத்துக் கொண்டு வந்து, மணப் பந்தலில் உட்கார வைத்தார்கள்.

தாலி கட்டினார் செல்லம்மாள் என்ற அழகு மங்கைக்கு துரைசாமி. திருமணமும் முடிந்தது. துரைசாமி சிறுவனாக இருக்கும்போதே குறும்பராக இருந்தார்: பள்ளிக் கூடத்திலும் குறும்பராக விளங்கி, கலங்கல் கிராம மணியம் செய்தபோதும் குறும்பராகத் திகழ்ந்து, இறுதியில் தனது திருமணத்தின்போதும்கூட, தீராதக் குறும்புக்காரப் பிள்ளையாகவே இருந்தார் என்பதுதான் குறிப்பிடத் தக்க சம்பவம் ஆகும்.

குறும்பே உருவாக நடமாடிய இந்த துரைசாமி, ஆண்டுகள் போகப் போக ஓயாத உழைப்பாளி ஆனார் உயர்ந்த தொழிலதிபர்களிலே ஒருவரானார் தொழிலாளர் உலகுக்கு மனிதாபிமானியாக விளங்கினார். உலகம் போற்றும் விஞ்ஞானியாகவும் உருவெடுத்துப் பற்பல சாதனைகளைச் செய்த ஜி.டி. நாயுடு ஆகவும் மாறினார் என்றால், இவரல்லவா வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த மேதை?