பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170 ★ வல்லிக்கண்ணன்


சுயம்புவை அவருக்குத் தெரியாதா? சும்மா தமாஷூக்குத்தான் சொன்னார்.

அவர் கொஞ்சமும் எதிர்பாராத விதமாகச் சுயம்பு லிங்கம் அங்கு வந்து நின்றவனை ஒரு தினுசாகக் கவனித்தார். “சரி, நீ முன்னாடி போ, இதோ நான் வாறேன்” என்றார்.

பொன்னுசாமி பெரிசாக ஒரு கும்பிடு போட்டு விட்டு வெளியேறினான்.

அவன் போனதும் சுயம்பு வேகமாக எழுந்தார். ஒரு துண்டை எடுத்து உடம்பை மூடியிருந்த பனியனுக்கு மேலாகப் போர்த்துக் கொண்டார். மேஜைமீது கிடந்த சிறு கைப்பிரம்பு ஒன்றை எடுத்துக்கொண்டு வேகமாகக் கிளம்பிவிட்டார்.

அவரை வேடிக்கை பார்த்தவாறு சோம்பிக் கிடந்த பாஸ்கர், “என்ன மிஸ்டர், அங்கேயா போகப் போநீங்க?” என்று கேட்டார்.

“ஊம்” என்று உறுமினார் சுயம்பு.

“அவங்களுக்கு வேறே வேலை கிடையாது. சோதாப் பசங்கள் மத்தியிலே நீங்க போயி என்ன பண்ணப் போறீங்க?”

“அவனுக எப்படி இருப்பாங்க என்றாவது பார்க்கலாமே!” என்று சொன்ன சுயம்புலிங்கம் தமது சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளியேறினார்.

“போகட்டும் போகட்டும். ஐயாவுக்குச் சரியான பாடம் கற்பித்து அனுப்புவாங்க. செம்தியா உதை தின்னுட்டு வருவாரு!” என்று சிரித்தது பாஸ்கரின் மனம்.