பக்கம்:தோழி நல்ல தோழிதான்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தோழி நல்ல தோழிதான்47

 அதனாலேதான் 'கடுங்காப்பி’' என்று அண்ணாச்சி சொல்லுவார் - ஒவ்வொரு தடவையும் சொல்லுவார்.

அதனாலென்ன, கடுங்காப்பிதான் டேஸ்ட்.... நல்லதும்கூட!’' என்று ஆண்டியாபிள்ளை கூறுவார்.

கிராமத்தில் உள்ள கறவைமாடுகளின் பால் எல்லாம் பண்ணையில் கறக்கப்பட்டு பக்கத்து டவுன்களுக்குப் போய்விடுவதால், ஊரிலே பாலுக்குத் தட்டுப்பாடு என்கிற உண்மையும் ஒவ்வொரு முறையும் அவர்களது பேச்சில் அடிபடும்.

இருந்தாலும், ஊரில் பால் தாராளமாகவே கிடைக்கிற நிலை இருந்தால்கூட, அண்ணாச்சியின் நிரந்தரமான பற்றாக்குறை பட்ஜெட் காப்பிக்குப் பால் வாங்குவதை அனுமதிப்பதில்லை. அதனால் என்ன?

இந்த உண்மையை ஆண்டியாபிள்ளையின் மனக் குறளி தானாகவே கூறிக் கொள்ளும். உரத்த சிந்தனையாக அல்ல.

கைலாசம்பிள்ளை தீனிப்பிரியர். சாப்பாட்டைவிட, நொறுக்குத் தீனி அவருக்கு அத்தியாவசியமானது. முறுக்கு, சீடை, தேன்குழல் என்று ஏதாவது எப்பவும் ஸ்டாக் இருந்து கொண்டேயிருக்கும். அது போக திடீரென்று நினைத்துக் கொண்டு, 'ஆமைவடை பண்ணு', 'வாழைக்காய் பஜ்ஜி', செய் 'உருளைக்கிழங்கு போண்டா செய் என்று விருப்பம் தெரிவித்துக் கொண்டேயிருப்பார். அவர் வீட்டு மதினியும் அலுக்காமல் சலிக்காமல் அவருடைய ஆசைகளை நிறைவேற்றி வருவாள். அவள் கைக்கு ஒரு தனி ராசி. அவள் எதைச் செய்தாலும் அது தனி ருசியும் மணமும் பெற்றிருக்கும்.

இவை தவிர, வேர்க்கடலை என்றால் - சிறிய கடை வைத்து உள்ளூரின் சின்னச் சின்னத் தேவைகளைப்