நக்கீரர்.
'அங்கங் குலுங்க வரிவாளி னெய்யென்றோர்
பங்கக் கவிதை பரமன் சொலவிளிந்து
சங்கறுப்ப தெங்கள்குலந் தம்பிராற் கேதென்றோர்
துங்க முறுங்கவிதை சொன்னா னெதிர் துணிந்து.;
என்னுஞ் செய்யுளொன்றே. இச்செய்யுள்தானும் இதற்கு முன்பின் உள்ள செய்யுட்களை நோக்குழி அவ்விடத்திற்கு வேண்டாத தொன்றாகக் காணப்படுதலின், இது பின்னுளோர் இடைபுகுத்தெனக் கோடலேயேற்புடைத்து. எல்லா முழுமுதன்மையு முடையராய், எல்லா வான்மாக்களையும் அடிமையாகவுடைய விறைவர் நக்கீரனாரைக் கோட்டியுட் குடிபழித்தனரெனலும், நல்லிசைப் புலவராகிய கீரனாரும் அதற்கெதிராகப் பழித்துரைத்தாரெனலும் தெருளற்பாலவாமோ? அன்றி, இக்கதைக்குச் சிறந்த வாதாரமுமில்லை. இக்கதை பற்றுக்கோடாகவே புலவர் புராணமுடையாரும், நக்கீரரை நெய்தனிலத்துள்ள வோர் பாதவரில்லிற் பிறந்தவரெனக் கூறிப்போயினர்.
இக்கதையினையும்,
'வேளாப்பார்ப்பான் வாளரந்துமித்த வளைகளைந் தொழிந்த கொழுந்து'
என்னும் அகப்பாட்டடிகளையும்,
'யாகம் பண்ணாத ஊர்ப் பார்ப்பான் - இவர்களுக் குச் சங்கறுக்கையுந் தொழில்.'
என்னும் உரைக் குறிப்பையும் ஆதாரமாகக்கொண்டு, நக்கீரர் வேள்வி யியற்றாது சங்கறுக்குந் தொழில் மேற் கொண்ட பார்ப்பாராவர் எனக் கூறுவர், திரு. மு. இராகவையங்கார். அவர், அங்ஙனம் வேள்வி யியற்