32
நபிகள் நாயகம்
தலைவர் என்ற பொருளில்தான், நபிகள் நாயகம் என்ற பெயரே அமைந்திருக்கிறது.
9. அருங்குணங்கள்
இனி இவரது அருங்குணங்கள் சிலவற்றை ஆராய்வோம்.
ஏழைகள் மீது கருணை
எம்பெருமானார் அவர்கள் கருணையுள்ளம் படைத்தவர்கள். அதிலும் அவர்கள் ஏழைகளிடத்தில் காட்டும் கருணை அளவு கடந்ததாகும். அதற்கு எடுத்துக்காட்டு ஒன்று கூறுகிறேன்.
நாயகம் அவர்கள் தமக்கென்று இரண்டு ஆடைகளையும், இரண்டு தாழம்பாய்களையும் வைத்துக் கொண்டு மற்றவற்றையெல்லாம் இல்லாத மக்களுக்கு வழங்கினார்கள் என்று தான் நாம் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் இத்தாலி தேசத்துப் பேராசிரியர் ஒருவர், அதில் ஒரு நயத்தைப் புகுத்தி எழுதியிருக்கிறார். அது, தமக்கென்று இரண்டு தாழம்பாய், இரண்டு ஆடைகளை வைத்துக் கொண்டு, மற்ற எல்லாவற்றையும் இல்லாத மக்களுக்கு வழங்கிப் பெற்றுக் கொண்ட மக்களின் முகம் மகிழ்ச்சி அடைவதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார் என்பதே. இது நம் உள்ளத்தைத் தொடவில்லையா? பெற்றுக் கொண்டவர்களுடைய முகம் மகிழ்ச்சி அடைவதைக் கண்டு அவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள் என்பதைப் படிக்கும் போதே, நமக்கு வியப்பையையும் மகிழ்ச்சியையும் ஒருங்கே அளிக்கிறது. இது எவ்வளவு பெரிய கருணை என எண்ணிப் பார்க்க வேண்டும்.