பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/115

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

97



இவற்றை எல்லாம் கேட்டதும் பெருமானார் அவர்கள் மகிழ்ச்சியால் பூரித்தார்கள்.

குறைஷிகளை எதிர்ப்பதற்குத் தீர்மானித்தார்கள்.

ஆண்டவனிடமிருந்து அவர்களுக்கு அனுமதியும் கிடைத்தது.

ஹிஜ்ரீ இரண்டாம் ஆண்டு ரம்லான் மாதம் 12ந்தேதி, பெருமானார் அவர்கள் முஸ்லிம்களுடன் மதீனாவிலிருந்து புறப்பட்டார்கள்.

மதீனாவிலிருந்து ஒரு மைல் தூரம் வந்தவுடன், சேனைகளைச் சரி பார்த்தார்கள்.

இளம் பிள்ளைகளுக்கு, ஆபத்தான சந்தர்ப்பத்தில் வேலை இல்லை என்று கருதி, அவர்களை எல்லாம் திரும்பிப் போகுமாறு கூறினார்கள்.

மதீனாவை மேற்பார்வை செய்யுமாறு, அபூ லுபாபா என்பவரைப் போகும்படி சொன்னார்கள்.

தங்களுக்கு முன்னே இரண்டு உளவாளிகளை அனுப்பி, குறைஷிகளின் வருகையை அறிந்து முன்னெச்சரிக்கையாகத் தெரிவிக்குமாறு ஏற்பாடு செய்தார்கள்.

பத்ரு என்னும் பள்ளத்தாக்கு மதீனாவிலிருந்து எண்பது மைல் தூரத்தில், ஷாம் தேசத்துக்குப் போகும் வழியில் உள்ளது.

பத்ரு பள்ளத்தாக்கு வழியாகக் குறைஷிகள் வருவதாகத் தெரிந்ததும், அந்தப் பக்கமாக முன்னேறிச் சென்றார்கள்.

பத்ரு பக்கம் போனதும், பத்ரின் மற்றொரு பக்கம் குறைஷிகள் வந்து சேர்ந்திருக்கிறார்கள் என்பதை உளவாளிகள் மூலம் அறிந்து, அந்த இடத்திலேயே நின்று கொண்டார்கள்.

முஸ்லிம்கள் சிறிய படையுடன் வந்திருந்தனர். குறைஷிகளோ ஏராளமான சேனையுடன் வந்திருந்தார்கள். குதிரைப் படையும் ஏராளமான தளவாடங்களும் அவர்களிடம் இருந்தன. குறைஷிகளின் தலைவர்கள் அனைவரும் வந்திருந்தனர். ஆனால், அபூலஹப் வரவில்லை.

8