ஸதக்கதுல்லா அப்பா அவர்கள் 17-வது நூற்றாண்டில், 84 வயது வரை வாழ்ந்த மகான். வள்ளல் சீதக்காதிக்கும், உமறுப்புலவருக்கும் குருவாய் அமைந்தவர்கள். அவர்கள் அரபியில் பாடிய வித்ரிய்யா என்னும் நூலில் உள்ள கருத்து:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் போற்றி மகிழும் பொருட்டு, ஹஜ் யாத்திரை செல்பவர்கள் தாம் ஊர்ந்து செல்லும் ஒட்டகங்களுக்கு ஏற்படும் களைப்பினை நீக்க, அவை அந்தச் சமாதியினை நோக்குமாறு செய்ய, அவற்றின் கழுத்துகளை அந்தப் பக்கமாகத் திரும்பும்படி லகானைச் சாய்க்கிறார்கள்.
ஃஃஃ
ஒருநாள் சொர்க்கத்தில் அவர்களைச் சந்திக்க நேரிடும்போது வெட்கி, முகஞ் சுருங்கிச் சிவந்து நிற்க நேரிடுமே! அப்படி நேராமல் இருப்பதற்காக, அப்பெருமானாரின் திருவிடத்தைத் தரிசனம் செய்து கொள்ளுங்கள். உடனே என்னையும் அங்கே போக விடுங்கள். நான் ஏன் அவ்வளவு அவசரப்படுகிறேன் என்றால், அந்தத் திருவிடத்தைத் தரிசிப்பது புனித ஹஜ் யாத்திரை செய்வதில் அடங்கியிருக்கும் கட்டாயக்கடமை எனக் கருதுகிறேன்.
ஃஃஃ
ஓ! மதினாவைக் காண ஆவலுறும் மக்களே! உங்கள் உடலை விட்டு உயிர் பிரியுமுன், மதீனாவுக்குச் செல்லுங்கள்; அங்கே நபிகள் நாயகம் அவர்களின் நல்லுடல் அடங்கியிருக்கும் திருவிடத்துக்குச் செல்லும் வழியைக் கண்டு, விரைந்து சென்று உங்கள் வாகனங்களாகிய ஒட்டகங்களை அங்கே நிறுத்துவீர்களாக!
*