163
பெருமானார் அவர்களோடு முஹாஜிர்களும், அன்ஸாரிகளும் மொத்தம் ஆயிரத்து நானூறு பேர் சென்றார்கள். குர்பானிக்காக ஒட்டகங்களையும் ஓட்டிச் சென்றார்கள்.
முன்னெச்சரிக்கையாக, குறைஷிகளின் எண்ணத்தை அறிந்து வருவதற்காக, முன்கூட்டியே ஒருவரைப் பெருமானார் அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.
பெருமானார் அவர்கள் தங்கள் கூட்டத்தாருடன் உஸ்பான் என்னும் இடத்துக்கு வந்து சேர்ந்தனர்.
குறைஷிகளும் இதரர்களும் ஒன்று கூடி, “பெருமானார் அவர்கள் மக்காவுக்குள் நுழைய அனுமதிக்க இயலாது” எனக் கூறியதாக, அந்தத் தூதர் திரும்பி வந்து தெரிவித்தார்.
குறைஷிகள், சுற்றுப் புறத்தில் உள்ளவர்களை எல்லாம் திரட்டிக் கொண்டு, பெருமானார் அவர்களை நுழைய விடாமல் தடுப்பதற்காக, மக்காவுக்கு வெளியே ஆயுத பாணிகளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
பெருமானார் அவர்கள், மக்காவுக்கு இருபத்தைந்து மைல் தொலைவிலுள்ள ஹுதைபிய்யா என்ற இடத்தில் தங்கள் கூட்டத்தாருடன் தங்கினார்கள்.
அங்கே ஒரே ஒரு சிறிய கிணறு மட்டுமே இருந்தது. அதிலும் நீர் இல்லாமல் வறண்டிருந்தது.
பெருமானாரின் காலடி பட்ட சிறப்பால், எல்லோருக்கும் போதுமான தண்ணீர், அந்தக் கிணற்றிலிருந்து பொங்கியது.
மக்காவில் இருந்த குஸா கோத்திரத்தார் அப்பொழுது இஸ்லாத்தைத் தழுவவில்லை. எனினும், அவர்கள் முஸ்லிம்களுடன் நட்புடனேயே இருந்தார்கள்.
இஸ்லாத்துக்கு விரோதமாகக் குறைஷிகளும், மற்றவர்களும் செய்யும் சூழ்ச்சிகளை குஸா கோத்திரத்தார் அவ்வப்போது முஸ்லிம்களுக்கு அறிவித்துக் கொண்டிருந்தார்கள்.