180
அவர் ஒருபோதும் வாக்கு மாறியதில்லை என்று சொல்லுகின்றீர்.
தீர்க்கதரிசிகள் ஒரு போதும் வாக்கு மாறி நடந்து கொண்டதில்லை".
பின்னர் அபூ ஸுப்யானிடம், “அவர் போதிக்கும் கொள்கைகள் எவை?" என்று கேட்டார் அரசர்.
“அவர் ஆண்டவனை வணங்கும் படியும், அந்த ஆண்டவனுக்கு வேறு யாரையும் இணையாக வைக்காமல் இருக்குமாறும், நோன்பைக் கடைப் பிடிக்குமாறும், உறவினர்களை அன்பாக நடத்துமாறும் போதிக்கின்றார்” என்று கூறினார்.
“நீர் இதுவரை கூறியவை உண்மையாக இருக்குமானால், அவர்கள் நபி என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. அவர்களுடன் நான் இருந்திருப்பின், அவர்களுடைய பாதங்களைக் கழுவியிருப்பேன். இன்னொரு கருத்தையும் இப்பொழுதே கூறிவிடுகிறேன். இன்று நான் ஆட்சி செலுத்தும் இந்த நாடும் ஒரு காலத்தில் அவர்கள் வசமாகும்” என்று அரசர் கூறி முடித்தார்.
பெருமானார் அவர்களிடம் பகைமை கொண்டிருந்தாலும், அரசரிடம் உண்மையை ஒளிவு மறைவின்றி அபூ ஸுப்யான் கூறியது வியப்புக்குரியது.
ஃஃஃ
பெருமானார் அவர்களின் கடிதம் அரசவையில் படிக்கப்பட்டதும், சபையில் சிறிது பரபரப்பு உண்டாயிற்று.
அரசரை இஸ்லாத்தைத் தழுவுமாறும், அவ்வாறு செய்தால் நலமாக இருப்பீர்கள் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன் பின்னர், அபூ ஸூப்யான் முதலானோரை சபையை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டது.
வெளியேறிய அபூ ஸூப்யான் தம்முடைய கூட்டத்தாரிடத்தில், “ரோமாபுரி அரசரும் மதிக்கும்படியான கெளரவத்தை முஹம்மது பெற்றிருக்கிறாரே” என்று சொல்லி, அங்கலாய்த்துக் கொண்டார்.