பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/261

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

243



தாயிபு நக்ரத்தில் தகீப் கூட்டத்தாரில், உர்வத் என்பவர் முக்கியப் பிரமுகர் ஆவார். அவர் பெருமானார் அவர்களை நன்கு அறிந்தவர். முன்பு, ஹுதைபிய்யா உடன்படிக்கையின்போது, குறைஷிகளின் பிரதிநிதியாகப் பெருமானார் அவர்களிடம் வந்து சமாதானம் பேசியவர். அவருக்கு ஆரம்பத்திலிருந்தே இஸ்லாத்தின் மீது பற்றுதல் உண்டாகி இருந்தது.

பெருமானார் அவர்கள், தாயிபை முற்றுகையிட்ட போது, அவர் ஏமன் தேசத்துக்குப் போயிருந்தார். அவர் திரும்பி வரும் போது நேராக மதீனாவுக்கு வந்து பெருமானாரைச் சந்தித்து, இஸ்லாத்தைத் தழுவினார். தம்முடைய கூட்டத்தாரும் இஸ்லாத்தின் பாக்கியத்தைப் பெற வேண்டும் என்பது அவருடைய ஆவல்.

உடனே தாயிபுக்குச் சென்று, அங்குள்ள மக்களை எல்லாம் கூட்டி, இஸ்லாத்தின் மேன்மையை அவர்களுக்கு எடுத்துக் கூறினார். அவர்கள் அதை ஏற்காமல், அவரை இகழ்ந்து பேசினார்கள்.

மறு நாள் புலர்காலைப் பொழுதில் உர்வத், தம் வீட்டின் முகட்டில் நின்று கொண்டு அதிகாலைத் தொழுகைக்காக எல்லோரையும் அழைத்தார். அதைக் கேட்டதும் அங்குள்ள மக்கள் அனைவரும் அவரைச் சூழ்ந்து கொண்டு பல பகுதிகளிலிருந்தும் அவர் மீது அம்பு எய்தார்கள். அதனால் அவர் உயிர் துறக்கும்படி நேரிட்டது.

மரணத் தறுவாயில், தம் குடும்பத்தாரிடம், “மக்களுடைய நன்மைக்காக என் இரத்தத்தை, என்னுடைய ஆண்டவனிடம் சமர்ப்பிக்கின்றேன். உயிர்த் தியாகம் கிடைத்த பாக்கியத்திற்காக ஆண்டவனை நான் வணங்குகிறேன். தாயிபின் முற்றுகையின் போது, மரணம் அடைந்த முஸ்லிம்களின் புதைகுழிகளுக்கு அருகில் என்னையும் அடக்கம் செய்யுங்கள்” என்று கூறினார் உர்வத்.


190. சில நிபந்தனைகளும் - மறுப்பும்

சுற்றுப் புறங்களிலுள்ள கேர்த்திரத்தார் அனைவரும் இஸ்லாத்தைத் தழுவி விட்டார்கள். இனிமேல் தாங்களும் அதில் சேருவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை தாயிப் பகுதி தகீப் கூட்டத்தார் உணர்ந்தார்கள்.