பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/279

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

261



203. துக்கமும் மகிழ்ச்சியும்

பெருமானார் அவர்கள், தங்களுடைய மகள் பாத்திமா அவர்களிடம் அளவற்ற அன்பு கொண்டிருந்தர்கள்.

பெருமானார் அவர்கள் நோயுற்றிருக்கும் போது ஒருநாள், மகளை அழைததுக் காதில் சில வார்த்தைகள் சொன்னார்கள். அதைக் கேட்டதும் அவர்களுக்குத் துக்கம் மேலிட்டது. கண் கலங்கியது.

மறுபடியும், பெருமானார் அவர்கள், அருகில் அழைத்து அவர்கள் காதில் சில வார்த்தைகள் சொன்னார்கள். அதைக் கேட்டதும் அவர்கள் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது. புன்னகை அரும்பியது.

ஆயிஷா நாச்சியார் அவர்கள், பாத்திமா அவர்களிடம் “முதலில் வருத்தமும், பிறகு மகிழ்ச்சியும் ஏற்படக் காரணம் என்ன?” என்று கேட்டார்கள்.

அதற்கு ஹலரத் பாத்திமா “'இந்நோயினால் நான் உயிர் துறப்பேன்', என்று பெருமானார் அவர்கள் முதலில் சொன்னார்கள். அது எனக்கு வருத்தத்தை அளித்தது. மறுபடியும் என்னை அழைத்து, 'நம்முடைய குடும்பத்தாரில் எல்லோருக்கும் முன்னதாக, நீயே முதலாவதாக வந்து என்னைச் சந்திப்பாய்,' என்று சொன்னார்கள், அது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது” என்று கூறினார்கள்.


204. “நல்ல காரியங்களையே செய்வீர்களாக!”

மனிதன் தன்னுடைய செயலினாலேயே மறு உலகில், இலாப நஷ்டத்தைப் பெறுகிறான் என்பதை விளக்கிக் காட்டுவதற்காகப் பெருமானார் அவர்கள், “ஆண்டவனுடைய தூதரின் புதல்வியான பாத்திமாவே! ஆண்டவனுடைய தூதரின் மாமியாகிய ஸபிய்யாவே: ஆண்டவனிடம் செல்வதற்காக நீங்கள் நல்ல காரியங்களைச் செய்யுங்கள். ஆண்டவனிடமிருந்து நான் உங்களைத் தப்புவிக்க முடியாது” என்று சொன்னார்கள்.