பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14



ஹலிமா-நாயகம் அவர்களுக்குப் பாலூட்டி வளர்த்த செவிலித் தாய்.

ஹப்ஸா நாச்சியார்-இவர் தந்தை உமர்(ரலி). அன்னை ஜைனப். சகோதரர் அப்துல்லாஹ் இப்னு உமர். இவரை முதலில் குனைஸ் குதாபாவுக்கு மணமுடித்தனர். குறைஷிகளின் கொடுமை தாளாது, இருவரும் அபிசீனியா சென்று திரும்பினர். பத்ருப் போரில் குனைஸ் படுகாயம் அடைந்து இறந்தார். அதன் பின், இவரை அண்ணல் நபி அவர்கள் மணந்து கொண்டனர்.

ஹன்லலா இப்னு அபூ ஆபீர்-இவர் அபூ அமீர் மகன். உஹத் போரில் கலந்து, தம் தந்தைக்கு எதிராகப் போர் புரிந்து, எதிரிகள் பலரைக் கொன்றார். பின்னர் இவரும் கொல்லப்பட்டார்.

ஹஸ்ஸான் இப்னு தாபித்-மதீனாவில் பிறந்த சிறந்த கவிஞர். இஸ்லாத்தைத் தழுவி, பெருமானாருக்கு ஒத்துழைப்பு நல்கினார். 120 ஆண்டுகள் வரை வாழ்ந்தார்.

ஹாதிப்-மக்காவின் மீது படையெடுக்க உத்தேசித்திருந்த இரகசியச் செய்தியை ஸாரா என்ற பெண் மூலம் குறைஷிகளுக்கு எழுதி அனுப்பியவர். ஆனால் அது உடனடியாகக் கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் பெருமானாரால் இவர் மன்னிக்கப் பெற்றார்.

ஹாரிது-அபூஸுப்யானின் தந்தை. பகைவர்களின் தாக்குதலிலிருந்து பெருமானாரைக் காப்பதற்காக, அவர்களுக்கும் குறைஷிகளுக்கும் மத்தியின் நின்றார். பல பகுதிகளிலிருந்து வீசப்பட்ட கத்திகளினால் தாக்குண்டு உயிர் துறந்தார்.

ஹிந்தா-இவர் இஸ்லாத்தின் கொடிய விரோதியாக இருந்தவர். உத்பா இப்னுராபி ஆவின் மகள், அபூஸூப்யானின் மனைவி. மக்கா வெற்றிக்குப் பின் இஸ்லாத்தைத் தழுவி, பெருமானாரின் பெருந்தன்மையால் மன்னிப்புப் பெற்றவர். முஆவியா இவருடைய மகன்.

ஹிஷாம்-இவர் மிகவும் கெளரவமான ஹாஷிம் கோத்திரத்தாரின் நெருங்கிய உறவினர். குறைஷிகளின் பகிஷ்காரத்தைக் கருதி, இரகசியமாக உணவு, தானியங்கள் முதலியவற்றை நாயகம் அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தவர்.