பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16




நபிகள் நாயகம் அவர்கள் பிறப்பு

☐ மக்காவில் குறைஷி கோத்திரப் பிரமுகர் அப்துல் முத்தலிப் அவர்களுக்குப் பத்து ஆண் மக்கள் பிறந்தனர். அவர்களுள் கடைசி மகன் அப்துல்லாஹ் அவர்கள். இவர்கள் கி.பி.545ம் ஆண்டில் பிறந்தார்கள்.

☐ குறைஷிக் கோத்திரத்தில் பிறந்த உஹைப், யத்ரிப்பிலிருந்து மக்காவுக்குக் குடியேறி வசித்து வந்தனர். அவருடைய அண்ணன் வஹப். அவருக்கு ஒரு மகள் ஆமினா, அழகும் குணநலனும் ஒருங்கே அமைந்தவர்.

☐அந்த ஆமினாவை, தம் மகன் அப்துல்லாஹ்வுக்குத் திருமணம் செய்து வைத்தார் அப்துல் முத்தலிப்.

☐ கி.பி.570-ம் ஆண்டில் அப்துல்லாஹ் இறந்துவிட்டார்.

☐ அப்பொழுது அவருடைய அருமை மனைவி ஆமினா ஆறு மாதக் கர்ப்பவதியாக இருந்தார்.

☐ கி.பி.571-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20-ந் தேதி, திங்கட்கிழமை ஆமினா நாச்சியார் அழகான ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார். (இதற்குச் சரியான அரபு மாதம் ரபீயுல் அவ்வல், பன்னிரண்டாம் தேதி (யானை வருடம்))

☐ தமக்குப் பேரன் பிறந்திருப்பதை அறிந்ததும் பாட்டனார் அப்துல் முத்தலிப் மிகவும் மகிழ்ச்சியுற்றார். உடனே அவர் குழந்தையைக் கஃபாவுக்கு எடுத்துப் போய் நன்றி செலுத்தி இறைவனைத் தொழுதார்.

☐ குழந்தைக்கு 'முஹம்மது' என்று பெயர் சூட்டினார்.

☐ குழந்தையைக் கண்டு மகிழ வந்த உறவினர்கள்,"நம் நாட்டில் இத்தகைய பெயரை யாரும் வைப்பது இல்லையே! நீங்கள் ஏன் உங்கள் பேரக்குழந்தைக்கு ‘முஹம்மது’ என்று பெயர் சூட்டியிருக்கிறீர்கள்” என்று கேட்டனர்.