22
பெருமானாரிடம் அந்தத் துறவி உரையாடும் பொழுது, அவர்களுடைய முகத் தோற்றத்தையும், அறிவுக் கூர்மையையும், கனிவான சொற்களையும் கண்டு வியப்புற்றார்.
“அபூதாலிப் அவர்களே! இப் பாலகரை கவனமாகப் பார்த்துக் கொள்வீராக! இவர் அரேபியாவின் பேரொளி ஆவார்.
“அரேபியாவிலுள்ள விக்கிரக வழிபாட்டை, அடியோடு அகற்றுபவர் இவர்!
“ஹலரத் ஈஸா நபி அவர்களின் முன் அறிவிப்புப்படி, ஆண்டவனால் இறுதியாக அனுப்பப்பட்டுள்ள நபி இவர்களே!
“இவர்களுக்கு யூதர்களினால் எந்த இடையூறுகளும் உண்டாகாமல் கவனமாகப் பாதுகாத்து வருவீராக” என்று கூறினார் கிறிஸ்துவத் துறவி.
அதிலிருந்து, அபூதாலிப், பெருமானாரை முன்னிலும் பன்மடங்கு கவனமாகப் பாதுகாத்து வரலானார்.
பெருமானார் அவர்கள் ஹலரத் அபூதாலிபுடன் ஷாம் தேசத்துக்குப் பயணமாகச் சென்ற பொழுது, ஆண்டவனுடைய பெருமையையும், வல்லமையையும் காட்டக் கூடிய பல அரிய காட்சிகள் பெருமானாருக்கு நன்கு புலப்பட்டன.
மலைகள், காடுகள், ஆறுகள், ஏரிகள் ஆகியவை, பெருமானார் அவர்களின் உள்ளத்தில் என்றும் அகலாத ஓர் உண்மையை உணர்த்தின என்றே கூற வேண்டும்.
“ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்” என்பதை எண்பிக்கும் வகையில் இவற்றையெல்லாம் சுட்டிக் காட்டி, “இத்தகைய பொருள்களை எல்லாம் படைத்தது யார்? அவனுடைய உண்மையை இந்தப் பொருள்கள் உணர்த்தவில்லையா?” என்று சொல்வார்கள், பெருமானார் அவர்கள்.