பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/48

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30



பெருமானார் அவர்களின் குடும்பத்தினரையும், கூட்டாளிகளையும் பெருமாட்டியார் அன்போடு, வரவேற்று கனிவோடு உபசரித்து அனுப்புவார்கள்.

பெருமானார் அவர்களின் திருமணச் செய்தியைக் கேள்வியுற்று, அவர்களுடைய செவிலித் தாயான ஹலிமா நாச்சியார் மக்காவுக்கு வந்தனர். அவர்களை கதீஜாப் பிராட்டியார் அன்போடு வரவேற்று, இனிதாக உபசரித்து, சில நாட்கள் தங்கள் இல்லத்தில் தங்கி இருக்கச் செய்து கெளரவித்தனர். அவர்கள் விடை பெற்று ஊருக்குப் புறப்படும் பொழுது, நாற்பது ஆடுகளைப் பரிசாகக் கொடுத்து அனுப்பினார்கள்.


18. அடிமையை விடுவித்த உயர் பண்பு

செல்வந்தன்-ஏழை, முதலாளி-அடிமை என்ற வேறுபாடின்றி எல்லோரிடமும் அன்பும், சமத்துவமும் கொண்ட இயல்பு உடையவர்களாகப் பெருமானார் விளங்கினார்கள்.

இந்தச் சமத்துவ இயல்பினால், பெருமானார் உலகத்துக்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தார்கள்.

போரில் சிறை பட்டவர்களை, அடிமைகளாக்கி, அவர்களைப் பண்டமாற்றுப் பொருள்களைப் போல் விற்பனை செய்வது அரபு நாட்டில் அந்தக் காலத்தின் வழக்கமாயிருந்தது.

ஒரு சமயம், சிறை பிடித்து, அடிமையான ஜைதுப்னு ஹாரிதா என்பவரை விற்பனை செய்வதற்காகச் சந்தைக்குக் கொண்டு சென்றனர். அவரை, ஹக்கீம் இப்னு ஹஸ்லாம் என்பவர் விலைக்கு வாங்கி, தம் தந்தையின் சகோதரி கதீஜா நாயகியாருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்.

கதீஜா நாயகியாரோ, அந்த அடிமையைப் பெருமானாருக்குக் கொடுத்துவிட்டார்கள்.

பெருமானார் அவர்கள், உடனே ஜைதை அடிமையிலிருந்து விடுவித்து, "நீர் இங்கே இருக்க விரும்பினால் இருக்கலாம்: அல்லது உம் விருப்பம் போல் சுதந்திரமாக எங்கே வேண்டுமானாலும் போகலாம்” என்று கூறினார்கள்.