44
இனி, பெருமானார் அவர்களுக்கு இடையூறுகள் உண்டாக்கி, இன்னல்களை விளைவிப்பது எனத் தீர்மானித்தனர் குறைஷிகள். அவ்வாறே செய்தனர்.
ஒரு சமயம், பெருமானார் அவர்கள் கஃபாவில் நின்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார்கள்.
அதைக் கண்டதும் அடங்காத கோபம் கொண்ட குறைஷிகள், பெருமானார் அவர்களைத் தாக்கினார்கள்.
அதை அறிந்த ஹாரிது என்பவர் ஓடோடி வந்து, பெருமானார் அவர்களுக்கு ஆபத்து நேரிடாதபடி பெருமானார் அவர்களுக்கும், குறைஷிகளுக்கும் மத்தியில் நின்று கொண்டார்.
பல பகுதிகளிலிருந்தும் வீசப்பட்ட கத்திகளினால் தாக்குண்ட ஹாரிது உயிர் துறந்தார்.
ஒரு நாள் பெருமானார் அவர்கள், கஃபாவின் அருகில் தனியாக நின்று கொண்டிருப்பதைக் கண்ட குறைஷிகள் ஒரு கச்சையைக் கொண்டு அவர்கள் கழுத்தைச் சுற்றி முறுக்க முற்பட்டார்கள்.
அதனால், பெருமானார் அவர்கள் மூச்சுத் திணறி, மிகுந்த இன்னலுக்கு ஆளானார்கள்.
அப்பொழுது, தற்செயலாக அங்கே வந்த அபூபக்கர் அவர்கள், அதைக் கண்டதும், அந்தச் சதிக்கூட்டத்தின் மத்தியில் நுழைந்து, மிகுந்த கஷ்டத்தோடு பெருமானார் அவர்களைக் குறைஷிகளின் பிடியிலிருந்து விடுவித்தார்கள்.
ஆனால், குறைஷிகள் அனைவரும் அபூபக்கர் அவர்களைச் சூழ்ந்து கொண்டு தாக்கினார்கள். அதனால் அவர்கள் மயக்கமுற்றுக் கீழே விழுந்து விட்டார்கள் அவர்கள் உணர்வற்றுக் கீழே கிடந்ததைக் கண்டதும் இறந்து விட்டதாகக் கருதி, குறைஷிகள் போய்விட்டனர்.
பிறகு வெகு நேரம் கழித்துத்தான், அபூபக்கர் அவர்கள் உணர்வு பெற்றார்கள்.