பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55



திகில் அடைந்திருந்த முஸ்லிம்கள் கதவைத் திறக்கத் தயங்கினார்கள்.

அப்பொழுது ஹம்ஸா அவர்கள் முஸ்லிம்களை நோக்கி,"உமரை உள்ளே வரவிடுங்கள். அவர் நல்ல நோக்கத்தோடு வந்தால் சரி, இல்லையானால், அவர் கையிலுள்ள வாளைக் கொண்டே, அவருடைய தலையைக் கொய்து விடுவேன்” எனத் துணிவோடு கூறினார்கள்.

கதவு திறக்கப்பட்டது. உமர் உள்ளே வந்தார்.

பெருமானார் அவர்கள் எதிரே சென்று "உமரே, நீர் என்ன நோக்கத்தோடு இங்கு வந்தீர்?” என்று கேட்டார்கள்.

அவர்களுடைய வார்த்தையானது, உமரை நடுங்கச் செய்து விட்டது.

உமர் மிகவும் பணிவோடு,"இஸ்லாத்தை ஒப்புக் கொள்வதற்காக” என்று கூறினார்.

உடனே பெருமானார் அவர்கள், “அல்லாஹூ அக்பர்” (ஆண்டவன் மிக உயர்ந்தவன்) என உரக்கக் கூறினார்கள்.

அங்கே இருந்த அனைவரும் உடனே அவர்களோடு சேர்ந்து,"அல்லாஹூ அக்பர்” என முழங்கினார்கள்.

மக்காவில் இருந்த மலைகளில் எல்லாம் எதிரொலி கிளம்பின!

உமர் முஸ்லிம் ஆனதும், இஸ்லாமிய வரலாற்றில் ஒரு திருப்பம் உண்டாயிற்று.

அது வரை முஸ்லிம்களின் எண்ணிக்கை, மிகக் குறைந்த அளவில் இருந்ததால், தங்கள் மத சம்பந்தமான காரியங்களைப் பகிரங்கமாக நடத்த இயலாமல் இருந்தது.

உமர் இஸ்லாத்தைத் தழுவியதும், நிலைமையோ மாறிவிட்டது! உமர் இஸ்லாத்தைத் தழுவிய செய்தியை எல்லோருக்கும் அவர்களே அறிவித்தார்கள்.

அதன் பின்னர், முஸ்லிம்கள் கஃபாவில் எவ்வித பயமும் இல்லாமல் தொழுகையை நிறைவேற்றினார்கள்.