57
அதை அறிந்த அபூதாலிப் அவர்கள், வேறு வழி இல்லாமல் தங்கள் குடும்பத்தினர் அனைவரையும் கூட்டிக் கொண்டு, மக்காவுக்கு அருகில் உள்ள தமக்குச் சொந்தமான பள்ளத்தாக்கில் தங்கினார்கள்.
அங்கே உணவு கிடைக்காமல் இலை, தழை, குழைகளை உண்டார்கள். பசியினால் குழந்தைகள் வீறிட்டு அழுதன. அந்த அழுகையை வெளியேயிருந்து கேட்டுக் குறைஷிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பெருமானார் அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் சுமார் மூன்று ஆண்டுகள் உணவு இல்லாமல் துன்புற்றுக் கொண்டிருந்தனர்.
இறுதியாக, குறைஷிகளிலேயே தயாள குணமும், நியாய உணர்ச்சியும் உள்ள சிலர், துன்ப நிலையைக் காணப் பொறுக்காமல், உடன்படிக்கையையும் மீறி உணவுப்பொருள்களை அனுப்பி வைத்தார்கள்.
நெருங்கிய உறவினரான ஹிஷாம் என்பவரும் இரகசியமாகச் சில வேளைகளில் தானியங்களை அனுப்புவார்.
அபூதாலிப் அவர்களின் சகோதரி மகனான ஸூபைரிடம் அவர் சென்று, “நீர் மட்டும் நன்றாக உண்டு சுகமாக இருக்கிறீர்! ஆனால், உம்முடைய மாமாவிடமோ ஒரு தானியம் கூட இல்லையே. அவர்கள் இப்படி துன்புற்றுக் கொண்டிருப்பது உமக்குச் சம்மதம்தானா?" என்று கேட்டார்.
அதற்கு ஸூபைர், “நான் ஒருவன் என்ன செய்ய முடியும்? என்னோடு ஒருவராவது சேர்வதாயிருந்தால், அந்த நியாயமற்ற உடன்படிக்கையை நானே கிழித்து எறிந்து விடுவேன்” என்றார்.
“நான் உம்மோடு சேருகிறேன்” என்றார் ஹிஷாம்.
இருவரும் முத்யிம் என்பவருடைய இல்லத்துக்குச் சென்றார்கள். வழியில் அவர்களோடு வேறு மூவரும் சேர்ந்தார்கள்.
எல்லோரும் ஆலோசித்துக் காலையில் கஃபாவுக்குப் போய் முடிவு செய்வதாகத் தீர்மானித்தார்கள்.