பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/82

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64



அப்பொழுது, முத்யிம் இப்னு அதி என்பவர் சமூக உணர்ச்சியினாலும், தம் நாட்டினர் என்ற அனுதாபத்தினாலும் பெருமானார் அவர்களுக்கு உதவி புரிய முன் வந்தார். அவர் குறைஷிகளை நோக்கி,

“எம் நாட்டவர்களே! நம்முடைய தேசமானது நாட்டுப் பற்றுக்கும், அன்னியர்களுக்கு அளிக்கும் உபசாரத்துக்கும் பல பகுதிகளிலும் பிரசித்தி பெற்றிருக்கிறது. அப்படியிருக்கும் போது, உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த நம்முடைய சகோதரர் ஒருவரை, இவ்வாறு இரக்கம் இல்லாமல் நீங்கள் நடத்துவதும், தம் சொந்த வீட்டுக்கு வர விடாமல் அவரைத் தடுப்பதும் பெருந்தன்மை ஆகுமா?” என்று கூறினார்.

உடனே முத்யிம் ஓர் ஒட்டகத்தில் ஏறிக் கொண்டு, தம்மைச் சேர்ந்தவர்களை ஆயுதபாணிகளாகக் கூட்டிக் கொண்டு, பெருமானார் அவர்கள் இருக்கும் இடம் சென்று அவர்களை அழைத்து வந்தார்.

பெருமானார் அவர்கள் வெளியே போகும் இடங்களுக்கெல்லாம், முத்யிமும் கூடவே சென்று வருவார்.

ஒருநாள் பெருமானார் அவர்கள், மக்களுக்குப் போதனை செய்து விட்டு முத்யிமுடன் திரும்பி வரும் போது குறைஷிகள், பெருமானார் அவர்களை நிந்தனை செய்ததோடு, முத்யிமையும் அவதூறாகப் பேசினார்கள்.

தமக்கு உதவி புரிபவர் இவ்வாறு நிந்தனைக்கு ஆளாவதைக் காணப் பெருமானார் அவர்களுக்குப் பொறுக்க முடியவில்லை. தங்களோடு வருவதனாலேயே அவருக்கும் அவமரியாதை ஏற்படுகிறது என்று எண்ணி, மறுநாளிலிருந்து தாங்கள் மட்டுமே வெளியே புறப்பட்டார்கள்.

அறிவுரை கூறத் தொடங்கிய போது மக்கள் வந்து கூடினார்கள். அவர்களைப் பார்த்து முதலாவதாக, “சகோதரர்களே! நான் இப்பொழுது முத்யிம் அவர்களின் ஆதரவில் இல்லை. என்னுடைய நாயகனே எனக்குப் புகலிடம். அவனுடைய உதவியும், மேற்பார்வையும் எனக்குப் போதுமானவை. ஆகையால் இனி முத்யிமை நிந்திக்க வேண்டாம்” என்று கூறினார்கள்.