vii
“நற்காரியங்கள் எப்பொழுதும் நன்மை தரும்!” என்பதற்கேற்ப, “நபிகள் நாயகம் அவர்களின் சரித்திர நிகழ்ச்சிகளை" எழுதி வெளியிடும் நல்வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்ததை எண்ணி, எண்ணி உள்ளம் பூரிக்கின்றோம்.
பெருமானார் அவர்கள் வரலாற்றை உலக முழுவதிலும் உள்ள அறிஞர்கள் எழுதிப் பெருமை பெற்றிருக்கின்றனர். மேலும், மேலும் எழுதுவார்கள். ஆயினும், இந்நூல் சரித்திரத் தொடர்புடைய சம்பவங்களைச் சுருக்கமாகத் தெளிவாக, சுவையாகக் கற்றோரும் மற்றோரும் படித்து மகிழத் தக்கவாறு எழுதியுள்ளோம்.
குறைகள், பிழைகள் காணப்படுமேயானால், அவை எங்களுடையவை ; புகழ் அனைத்தும் ஆண்டவனுக்கே!
பன்மொழிப் பேராசிரியர், பல நூல்களின் ஆசிரியர், பெருமதிப்பிற்குரிய இஸ்லாமியப் பேரறிஞர், மேதை மெளலானா மெளலவி எம். அப்துல் வஹ்ஹாப் சாகிபு M.A. B.Th அவர்கள், தங்களுடைய அரிய பல பணிகளுக்கிடையே இந்நூலைச் சரிபார்த்து உதவி, அணிந்துரை வழங்கியுள்ளார்கள்.
மயிலாடுதுறை ஏ.வி.ஸி. கல்லூரி சரித்திரப் பேராசிரியர், பல நூல்களின் ஆசிரியர், பன்மொழி அறிஞர் ஜனாப் அமீர் அலி M.A., M.Ed அவர்கள் ஆரம்பத்திலிருந்தே இந்நூலில் உற்சாகம் காட்டியதோடு, பாராட்டுரையும் அளித்திருக்கின்றார்கள்.
இத்தகைய நூலை எழுதத் தூண்டியவர்கள் பலர். அவர்களுள் அன்புசால் சொ.மு.க. ஹமீது ஜலால் அவர்களும், டாக்டர் ஹக்கீம் MM முஸ்தபா அவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள்.
மற்றும், பல வகையில் உதவி புரிந்த வர்த்தகப் பிரமுகர்கள்: குறிப்பாக, சீதக்காதி அறக்கட்டளை நிறுவனத்தினர், அச்சிட்டுக் கொடுத்தவர்கள் ஆகிய அனைவருக்கும் எங்களுடைய இதயம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னை-600 001 | எம்கே. ஈ.மவ்லானா |
முல்லை முத்தையா |