பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமக்கு நாமே உதவி

51


இரண்டு கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருப்பவன் சரியான முடிவுக்கு வரமுடியாமல், சஞ்சலப்பட்டுக் கொண்டேதான் கிடப்பான். அவனைப்போல் அவதிப்படும் ஆள் வேறு யாராகவும் இந்த உலகில் இருக்க முடியாது.

நல்லதோ கெட்டதோ முடிவெடுக்கத் தெரிந்தவன் மட்டுமே நிம்மதியாக வாழ்கிறான். நேர்த்தியாக செயல்படுகிறான். நிறைவான காரியங்களில் நேர்த்தியாக ஈடுபடுகிறான். நிலையான புகழை அடைகிறான்.

ஏனென்றால், உலகில் உள்ள எல்லா காரியங்களுமே முடிவினால் மட்டுமே ஏற்பட்டுவிடுவதல்ல. அதிகமான வாய்ப்புக்களால் தான் நடைபெறுகின்றன.

நாம் எடுக்கின்ற முடிவோ நமது இலக்கினைக் குறித்துக் காட்டுகிறது. இப்படித்தான் நடக்க வேண்டும் என்ற நமது இலட்சியப் பயணத்தைத் தொடங்கி வைக்கிறது. அதில் தவறு நேரலாம். தவறு நேர்ந்தால் என்ன?

தவறு நேர்கிறது என்று அறியும் பொழுது அதனைத் தவிர்த்துவிட முயலலாம். அதைச் சரி செய்து மேற்கொண்டு நடக்க முயற்சிக்கலாம். நாம் செய்வது சரி என்று தெரிந்தால், இன்னும் உறுதியாகச் செல்லலாம். இதுதான் வாழ்க்கை முறை.