வேதகால வைகறைக் கீற்றுகள்
உலக மொழிக்கெல்லாம் மூல மொழியாகவும், இந்திய மொழிக்கெல்லாம் தாய்மொழியாகவும், நாகரிகப் பண்பாட்டின் விளை நிலமாகவும் விளங்கியவை தமிழ் மொழியும் நாவல நன்னாடுமாகும்.
வரலாற்றுக்கு முற்பட்ட தொல்பழங்கால நாகரிக நாடுகள் தமிழ்நாடு, எகிப்து, கிரேக்கம், உரோம், சீனம், பாபிலோனியா, பாலத்தீனம், பாரசீகம் ஆகியன. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டுகட்கு முன் ஓங்கி உயர்ந்து செழித்து இருந்தன. இவை. மண்-பெண்-பொன்னாசைப்போர் களால் இந் நாகரிக நாடுகள் சிதைந்தன. சில அழிந்தன. பல இயற்கை நேர்ச்சிகளும் நிலநடுக்கங்களும் அங்கங்கு மக்களையும் திசைதோறும் வாழ்விருப்புக்குத் திசைதோறும் துரத்தியடித்தன. நெடும்பல் கால உலக வரலாறு இது.
இன்றைய இந்தியா அன்று ஒருமொழி வைத்தாண்ட தமிழர்களாலும் தமிழினக் கலப்பினராலும் ஆளப்பட்டு வந்தது. அரப்பா-மொகஞ்சதாரோ முதலிய நாகரிகங்கள் தமிழ் நாக ரிகங்களே. தமிழர் ஆண்ட இடங்களே. அந்தக் காலத்தில்தான் இரானிலிருந்து ஆரியர்கள் சிந்து ஆற்றுப் படுகையில் செழுமை நோக்கி வந்தனர். ஆரியன் என்ற சொல்லின் வேற்று வடிவம்தான் இரான் என்பது. இவ்விரு சொற்கும் நிலம் என்றே பொருள். நிலமே இவர்களின் வாழ்முதல்.