பக்கம்:நற்றிணை நாடகங்கள்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தினசரியா பாட்டு?

4

"ஐயோ! அழகின் செல்வியே! உன் பழைய அழகெல்லாம், கனவாய்ப் பழங்கதையாய்ப் பொய்யாய் அடியோடு தொலைந்து போயிற்றே (தொகல்வின் தொலைய)" என்று வருந்திக்கொண்டே, தோழி, தலைவிக்கு ஆறுதல் அளிக்க, அன்பாக அவள் உடலைக் கையால் தடவிக்கொடுக்கின்றாள். மெலிந்த உடலில் கைப்பட்டதும், தோழியின் துன்பம் பொங்குகிறது. " ஆ! தலையணைபோல மெத்தென நின்ற தோள்கள்-பச்சை மூங்கில் எனத் திரண்டு நிறம் கொண்டு அழகாக விளங்கிய தோள்கள் - பொலிவெலாம் இழந்து எலும்பும் தோலுமாய் நாளுக்கு நாள் மெலிந்து போய்விட்டனவே (தோள் நலம் சாஅய்)" என்று நைகின்றாள்.

தலைவன்மேல் பாய்கின்றது தோழியின் உள்ளம். ஆனால், பல சொற் பேசவில்லை. துன்பத்தினைப் பாராட்டுவதன்றே அவள் நோக்கம்; "இப்படி எல்லாம் வாட, உன்னை அணைத்து வாழ அவருக்கு அருள் இல்லாது போய் விட்டதே! (நல்கார் என்ற பெயர் பெற்றாரே)" என்று தொடங்குகிறாள்.

"அம்மட்டுமா அவர் கொடுமை இருந்தபடி! அன்பு காட்டாமற் போனாலும் கண்காண அருகில் இருந்தாலும் ஓர் ஆறுதலாய் இருக்கும். அதற்கும் இடம் இல்லாமல், துறவிபோல நம்மை அடியோடு விட்டொழிந்து, எங்கோ நீங்கிப் போயினரே!(நீத்தனர்!) என்னே!என்னே!" என்று புலம்புகிறாள்!

"இதுவே நம் நிலைமை. ஆனால், ஊர் நம்மைச் சும்மா விடுகிறதா? ஊரார் எல்லாம் பழி தூற்றுகின்றனர்.

73