பக்கம்:நற்றிணை 1.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

நற்றிணை தெளிவுரை


வேர்கள் ஒன்றோடொன்று பிணிப்புத்த மூங்கிற் புதரிடத்தே காற்று மோதிச் செல்லும். காற்றுச் செல்லுதவாலே தறியிடத்தே கட்டப்பெற்றிருக்கும் யானையொன்று அயாவுயிர்த்தாற் போன்ற இனிய ஓசையும் அதனின்றும் எழுந்துகொண்டிருக்கும். கோடை நீடியதும், மூங்கில்கள் நிரம்பியதுமான அத்தகைய காட்டகத்து வழியிலே, மலையிடத்து மறையப்போகின்றதான பௌர்ணமித் திங்களை யானும் நோக்கினேன். நோக்கியதும், மேலும் நடைதொடர மாட்டாதே நின்று தலைவியை நினைந்தேன். முட்போல கூரியலான பற்களையும், திலகமிட்டிருக்கப்பெற்ற இனிமை கமழும் அழகிய நெற்றியையும் கொண்ட நாள் நிரம்பிய திங்களொன்று, எம்முடைய உரிமைப் பொருளாகவும் உண்டென்று கருதினேன். முழங்குகின்ற குரவையுடைய வெங்காற்று இலைகளை எடுத்துச்செல்லுதலால் நிழவிடும் தன்மையிழந்து, உலர்ந்த கொம்புகளாகவே நிற்கின்ற மரங்களையுடையதும், கற்கள் விளங்குவதுமான உயர்ந்த மலைக்கு அப்பாலுள்ள ஊரிலிருப்பது அத் திங்கள் என்றும், அவ்விடத்து யான் எண்ணினேன் அல்லெனோ!

கருத்து : காட்டு வழியில் நடக்கும்பொழுதும், இரவு முற்றவும். இவள் நினைவாலேயே வருந்தினேன் என்பதாம்.

சொற்பொருள் : பிணி – பின்னிக்கிடத்தல். வெதிரம். மூங்கில். நரல் இசை – ஒலிக்கும் இசை. கந்து – கட்டுத் தறி. என்றூழ் – கோடை. தேம் – இனிமை.

விளக்கம் : 'குன்றூர் மதியம் நோக்கி, நின்று நினைந்து' என்றதனால், முழுநிலாத் திங்களையுடைய இரவு முற்றவும் வழிநடந்து கொண்டிருந்தவன், அதிகாலை வேளையினோ திங்களை மலைவாயிடத்துக் கண்டு, இப்படி நினைந்தான் என்று கொள்க. 'நின்று' என்றது, உடன் நடப்பாருடன் சேரச்செல்லாமல் தனியாக 'நின்று' என்றதாம். 'எமதும் உண்டு ஓர் மதிநாள் திங்கள்' என்றது. தலைவியின் திருமுகத்தை வியந்து கூறிக்கொண்டதாம். 'உயர்மலை உம்பரஃது' என்பதற்கு, 'உயர்மலையின் அப்பாலுள்ள ஊரிடத்தேயுள்ளது' என்று கொள்ளல் வேண்டும். 'அழுவத்து, கல்பிறங்கு உயர்மலை உம்பரத்து, குன்றூர் மதியம்' எனக் கூட்டிப் பொருள் காணினும் பொருத்தும்.

மேற்கோள் : 'நிகழ்ந்தது நினைத்தற் கேதுவுமாகும்' என்னும் சூத்திரத்திற்கு (தொல், பொருள். 42. உரை.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/125&oldid=1677451" இலிருந்து மீள்விக்கப்பட்டது