பக்கம்:நற்றிணை 1.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

139


தூய மடியினைப்போல விளங்கும், வெண்ணிறம் ஒளிசெய்யும் சிறகினையுடைய வெண்மையான சிறு குருகே! அவருடைய ஊராகிய அவ்விடத்து இனிதான புனலே இவ்விடத்தும் வந்து பரக்கின்ற, கழனியையுடைய நல்ல ஊரிடத்தாராகிய என் காதலருக்கு, என்னுடைய கலன்கள் நெகிழ்ந்து வீழ்கின்ற துன்பத்தை இதுகாறும் சொல்லாத குருகே ! அவரூரிடத்திருந்து எம் ஊரிடத்திற்கு வந்து, எம்முடைய உண்ணும் நீரினையுடைய பொய்கைத் துறையிடத்தே புகுந்து துழாவிச் சினைகொண்ட கெளிற்றுமீனைத் தின்றாயாய், மீண்டும் அவரது ஊருக்கே நீயும் செல்கின்றாய். அவரைப் போலவே பெற்ற உதவியை மறக்கும் அன்பினை நீயும் உடையையோ? அல்லது, பெரிதும் மறதியை உடையையோ?

கருத்து : 'இன்றேனும் அவரிடத்து என் குறையை எடுத்துக் கூறுவாயாக' என்பதாம்.

சொற்பொருள் : துறை – ஒலித்தல் துறை. மடி – மடிக்கப் பட்ட ஆடை. உண்துறை – உண்ணு நீர்ப் பொய்கையின் துறை. மறவி – மறதி. இழை – கலன்.

விளக்கம் : 'ஆங்கண் தீம்புனல் ஈங்கண் பரக்கும் கழனி நல்லூர் மகிழ்நர்' என்றது இவ்வூரின் நீர்வளத்திற்கு உதவும் ஊரனாயிருந்தும் எனக்கு மட்டும் உதவும் அருளற்ற கொடுந்தன்மையினன் ஆயினனே என்றதாம். 'மகிழ்நன்' மகிழ்வைத் தருபவன், காதலன். 'இழை நெகிழ் பருவரல்' உடல் மெலிதலால் வந்துற்ற துன்பம்; இதனால் தன் மேனியது நலிவைக் கூறுகின்றனள். 'இவ்வூர் வந்து சினைக் கெளிற்றை உண்டு போகும் நீதான், பெண்களைத் துன்புறுத்திச் சாகச்செய்து இன்புறுதலன்றி எனக்கு உதவும் அத்தகைய அன்பினை உடையை ஆவையோ?' என அதன்பாலும் நொந்து கொள்ளுகின்றாள். 'அது, தன்னை நுகர்ந்து இன்புற்றுக் கைவிட்டுப்போகிய தன் இன்ப நுகர்வையன்றிக் காதலியின் நலனைக் கருதாத தலைவனின் ஊரினின்றும் வந்ததால் உண்டாகிய தன்மையோ?' என்று குறித்தனளும் ஆம். 'பெருமறவியை’ என்றது. அவனும் என்னை மறந்தனன்; அவ்வாறு நீயும் மறதி உடையையோ?' என்றதாம்.

குருகு மீனுண்ணும் இயல்பிற்றாயினும் தன் ஆற்றாமையினாலே அது சினைக்கெளிற்றை உண்ணக் கண்டதும் அதன்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/140&oldid=1678182" இலிருந்து மீள்விக்கப்பட்டது