பக்கம்:நற்றிணை 1.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140

நற்றிணை தெளிவுரை


பால் இப்படிக் கூறி நொந்து உரைக்கின்றாள் தலைவி. ' துறை போகு அறுவைத் தூமடி அன்ன நிறம் கிளர் தூவிச் சிறு வெள்ளாங்குருகே' என்றது. 'உடலிடத்துத் தூய்மை உடையையாயினும் நின் உள்ளத்திடத்தே தூய்மையை உடையை அல்லை' என்றதுமாம்.

மேற்கோள் : 'காப்புச் சிறைமிக்க கையறு கிளவி' என்னும் துறைக்கு இச்செய்யுளை மேற்கோளாகக் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். பொருள். 111 உரை) பிற பாடங்கள் 'ஒண்துறை துழைஇ'

71. பிரிதல் வல்லீரோ?

பாடியவர் : வண்ணப்புறக் கந்தரத்தனார்.
திணை : பாலை.
துறை : தலைவனைத் தோழி செலவழுங்குவித்தது.

[(து–வி.) தலைவனது பொருள்வயிற் பிரிவினை அறிவிக்க கேட்ட தோழி தலைவியது பிரிவாற்றா நிலையை உரைத்தவளாக அந்தச் செலவைத் தடுக்க முயலுகின்றாள்.]

மன்னாப் பொருட்பிணி முன்னி 'இன்னதை
வளைஅணி முன்கைநின் இகுளைக்கு உணர்த்து'எனப்
பன்மாண் இரத்திர் ஆயின், 'சென்ம்' என
விடுநள் ஆதலும் உரியள், விடினே
கண்ணும் நுதலும் நீவி முன்நின்று 5
பிரிதல் வல்லிரோ–ஐய! செல்வர்
வகைஅமர் நல்இல் அகஇறை உறையும்
வண்ணப் புறவின் செங்காற் சேவல்
வீழ்துணைப் பயிரும் கையறு முரல்குரல்
நும்இலள் புலம்பக் கேட்டொறும் 10
பொம்மல் ஓதி பெருவிதுப் புறவே?

ஐயனே! நிலையற்றதான பொருளினைத் தேடும் ஆசை நோயினை அடைந்தீர். அதனையே கருத்திற்கொண்டு 'இக்காரியத்தை வளையணிந்த முன்னங்கைகளை உடையாளான நின் தோழிக்கு உணர்த்துவாயாக' என்று, பலவாக மாட்சிப்பட இரந்தும் கூறுகின்றீர். செல்வர்களது வகையமைந்த நல்ல நுமது வீட்டின் உள்ளிறைப்பில் தங்கியிருந்து வாழும் வண்ணப் புறாக்கனின் செங்கால்களை உடைய சேவலானது தான் விரும்பிய பெண்புறாவைக் கூட்டத்திற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/141&oldid=1678188" இலிருந்து மீள்விக்கப்பட்டது