பக்கம்:நற்றிணை 1.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142

நற்றிணை தெளிவுரை


[(து–வி.) தலைவன் சிறைப்புறமாக. அவனைத் தலைவியை வரைந்துகொள்ளத் தூண்டக் கருதினனாகிய தோழி, இவ்வாறு தலைவிக்கு உரைப்பாள் போல், அவனும் கேட்குமாறு கூறுகின்றாள்.]

'பேணுப பேணார் பெரியோர்' என்பது
நாணுத்தக் கன்றுஅது காணுங் காலை
உயிர் ஓரன்ன செயிர்தீர் நட்பின்
நினக்குயான் மறைத்தல் யாவது? மிகப்பெரிது
அழிதக் கன்றால் தானே கொண்கன் 5
யான் யாய் அஞ்சுவல்' எனினும், தான்எற்
பிரிதல் சூழான் மன்னே; இனியே
கானல் ஆயம் அறியினும், 'ஆனாது,
அவர்வந் தன்றுகொல்?' என்னும்; அதனால்
'புலர்வது கொல்அவன் நட்பு'எனா
அஞ்சுவல் தோழி என் நெஞ்சத் தானே! 10

தோழி! 'பேண வேண்டுவன எனப் பிறர் கருதும் பொருள்களைப் பெரியோர் விருப்பமுடன் பேணமாட்டார்கள்' என்பார்கள். அவரது அந்த நிலைதான் ஆராயுங்காலத்தே பெரிதும் வெட்கத்தைத் தருவதாகின்றது. இருவரும் ஓர் உயிரேயாய் அமைந்தாற்போலும் குற்றமற்ற செறிந்த நட்பினை உடையவளான நினக்கு, யான் ஒன்றை மறைத்தல் என்பதும் எத்துணைக் குற்றமாகும்? முன்காலத்தே, யான் "தாய் அறிதல் கூடுமென யான் அஞ்சுகின்றேன்' எனக் கூறினாலும், தான் என்னைப் பிரிந்திருத்தலைக் கருதானாய் உடனிருத்தலையே நாடியவனாக இருந்தனன். இதுகாலை அதுதான் கழிந்தது. கானலிடத்து விளையாட்டயர்கின்ற ஆய்மகளிர் அறிந்தாலும், இக்களவு மறைகடந்து வெளிப்பட அதனால் பழிச்சொற்களும் வந்தடையுமோ?' என்று கூறி அகன்று போகின்றான். அதனால், அவன் நட்புத்தானும் இல்லையாகிப் போகுமோ என்று கருதி, யானும் என் உள்ளத்தே அஞ்சா நிற்பேன். அந்த அச்சந்தானும் மிகப்பெரிதாக எனக்கு அழிவைத் தருகின்றதாயுள்ளதே?

கருத்து : 'அவனது நட்புச் செறிவினே தளர்ச்சியைக்கண்டேன்' என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/143&oldid=1678198" இலிருந்து மீள்விக்கப்பட்டது