பக்கம்:நற்றிணை 1.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

நற்றிணை தெளிவுரை


வருமழை கரந்த வால்நிற விசும்பின்
நுண்துளி மாறிய உலவை அம்காட்டு
ஆல நீழல் அசைவு நீக்கி,
அஞ்சுவழி அஞ்சாது, அசைவழி அசைஇ
வருந்தாது ஏகுமதி வால்இழைக் குறுமகள்! 5
இம்மென் பேர்அலர் நும்ஊர்ப் புன்னை
வீமலர் உதிர்ந்த தேன்நாறு புலவின்
கானல் வார்மணல் மரீஇக்
கல்லுறச் சிவந்தநின் மெல்அடி உயற்கே!

ஒள்ளிய கலன்களை அணிந்தானான இளைய மகளே! இம்மென்று எழுகின்ற பேரலர் தானும் பொருந்துதலையுடைய, நும் ஊரது புன்னையின் காம்பு கழன்ற மலர்கள் மிகுதியாக உதிர்ந்து கிடப்பதனாலே தேன் மணம் வீசுகின்ற, புலவினையுடைய கழிக்கரைச் சோலையிடத்தே, நெடிதான மணற்பாங்கிலே, நின்னடிகள் மெல்லென நடந்து பழகியன! இப்பொழுதோ, கற்களிற் பதிதலினாலே அவை வருத்தமுற்றவாய்ச் சிவப்புற்றன. அத்தகைய நின் மெல்லடிகள் உய்தலின் பொருட்டாக வருகின்ற மேகமும் பெய்யாது போகிய வெளிய நிறத்தையுடைய வானத்தினின்றும் நுண்ணிய மழைத்துளிகளும் இல்லாது போகிய, காற்றுச் சுழன்றடிக்கும் அழகான காட்டுவழி யிடத்தேயுள்ள ஆலமரத்து நிழவிடத்தே தங்கி, நீயும் இளைப்பாறிக்கொள்சு! அஞ்சத்தக்க வழியிடமேனும் அதற்கு அஞ்சாயாய் எவ்விடத்துத் தங்க நினைப்பினும் அவ்விடத்தே தங்கினையாய்ச், சிறிதும் வருத்தமுறாமற் படிக்குக் கவலையின்றிச் செல்வாயாக!

கருத்து : 'வழிநடை வருத்தத்தைப் போக்கினையாய், அஞ்சாதே என்னோடும் உடன் வருக' என்பதாம்.

சொற்பொருள் : வரும் மழை – வருகின்ற மேகம். வால் நிறம் –வெண்ணிறம். நுண்துளி – நுண்ணிய மழைத்துளி; பெருமழையின்றேனும் சிறுதூறல்தானும் இல்லாதே போகிய வெங்காடென்பது கருத்து. உலவை – ஒருவகை மரமும் ஆம். இம்மென் பேரவர் – இம்மென்று எழுந்த பேரவர். இந்த மெல்லிய பேரவரும் ஆம்; மென்பேரலராவது, பலரும் காதொடு காதாகத் தம்முட் கலந்து பேசுதலினாலே பரவிய பழிச்சொற்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/151&oldid=1679052" இலிருந்து மீள்விக்கப்பட்டது