162
நற்றிணை தெளிவுரை
82. வருத்தம் அறிகின்றாயோ?
- பாடியவர் : அம்மள்ளனார்.
- திணை : குறிஞ்சி.
- துறை : தோழியிற் புணர்ச்சிக்கண் தன்னிலைக் கொளீஇயது.
[(து–வி) தோழியின் உதவியோடு தலைவியைக் களவிற் கூடிய தலைவன், தன்னுடைய மனநிலை தலைவிக்குத் தோன்றுமாறு, அவள் நலத்தைப் பாராட்டி உரைத்தது இதுவாகும்.]
நோயும் நெகிழ்ச்சியும் வீடச் சிறந்த
வேய்வனப் புற்ற தோளை நீயே,
என்உயவு அறிதியோ, நல்நடைக் கொடிச்சி!
முருகுபுணர்ந்து இயன்ற வள்ளி போலநின்
உருவுகண் எறிப்ப நோக்கல்ஆற் றலெனே—
5
போகிய நாகப் போக்குஅருங் கவலை
சிறுகட் பன்றிப் பெருஞ்சின ஒருத்தல்
சேறுஆடு இரும்புறம் நீறொடு சிவண,
வெள்வசிப் படீஇயர், மொய்த்த வள்புஅழீஅக்
கோள்நாய் கொண்ட கொள்ளைக்
கானவர் பெயர்க்கும் சிறுகுடி யானே.
10
யான் கொண்டிருக்கும் இந்தக் காமநோயும், அதனால் என்பால் வந்துற்ற உடலின் தளர்ச்சியும். என்னைவிட்டு முற்றவும் அகலுமாறு என்னைத் தழுவிக்கிடந்த, மூங்கிலின் வனப்பினை அடைந்திருக்கின்ற தோள்களை உடையவளே! நல்லதாகிய நடைப்பாங்கினை உடையானான குறவர் மகளே! வானில் உயரப்போகிய நாகமரங்களை உடையது, கடத்தற்கரியதான கவறுபட்ட காட்டுவழி. அதனிடத்தே. சிறுத்த கண்களைக் கொண்ட பன்றியது பெருஞ்சினத்தையுடைய ஆணானது சேற்றிடத்தே புரண்டதனால் தன்னுடைய கரிய முதுகுப்புறம் புழுதியோடு விளங்கச் சென்று கானவர் கண்ணியிட்டுள்ள வெறும் பிளப்பிடைச் சென்று விழுந்துபட்டது. அங்ஙனம் படுதலும், வேட்டை நாய்கள் அதன்பாற் சென்று மொய்த்தவாய், வாரை அழித்து அதனைப் பற்றிக் கொன்றுகொண்டன. கானவர் சென்று அந் நாய்களை விலக்கிப் பன்றியைத் தாம் எடுத்துக்கொண்டு சென்றனர். அத்தகைய சிறுகுடியிருப்பினது நின் ஊராகும்.