பக்கம்:நற்றிணை 1.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

191


[(து–வி.) பிரிந்து சென்றானாகிய தலைவன், குறித்துச் சென்ற பருவத்தும் வாராதானாக அதனாற் பெரிதும் வருத்தி நலிந்த தலைவி, தனது துன்பத்தைத் தன் தோழிக்கு உணர்த்துகின்றாள்.]

அழுந்துபடு விழுப்புண் வழும்புவாய் புலரா
எவ்வ நெஞ்சத்து எஃகுஎறிந் தாங்குப்
பிரிவில புலம்பி நுவலும் குயிலினும்,
தேறுநீர் கெழீஇய யாறுநனி கொடிதே!
அதனினும் கொடியள் தானே, 'மதனின் 5
துய்த்தலை இதழ பைங்குருக் கத்தியொடு
பித்திகை விரவுமலர் கொள்ளீ ரோ?'என
வண்டுசூழ் வட்டியள் திரிதரும்
தண்டலை உழவர் தனிமட மகளே!

தோழீ! என் பக்கலிருந்து பிரிந்துபோகாதாய்ப் புலம்பிக் கூவும் குயிலினது குரலைக் காட்டினும். தெளிவான நீர் நிரம்பியபடி வருகின்ற ஆறானது, அழுந்தப்பட்ட பெரிய புண்ணினது வாயிடத்துள்ள நிணம் காயப்பெறாததனாலே துன்புற்றிருக்கும் மார்பினிடத்தே. வேற்படையினையும் எறிந்து மேலும் புண்படுத்தினாற் போலாயிற்று. அதனைக் காட்டினும், 'அழகான இனிய பஞ்சுபோன்ற புறவிதழ்களை உடையவான பசிய குருக்கத்தி மலருடனே விரவிய பித்திகையது மலரையும் விலைக்குக் கொள்ளீரோ?' எனக் கூறியவளாக, வண்டினம் சூழ்ந்து வட்டமிட்டபடியிருக்கும் வட்டப் பூக்குடலையோடு தெருவிலே திரிபவளான, நீர்ப்பாங்கான குளிர்ந்த இடத்திலே உள்ளவரான உழவரது ஒப்பற்ற இளமகள் பெரிதும் கொடுமை செய்பவள் ஆகின்றாளே!

கருத்து : 'இனி யான் எவ்வாறு உய்வேனோ?' என்பதாம்.

சொற்பொருள் : அழுந்து படல் – ஆழமாகப் படுதல். வழும்பு – புண். எஃகு – வேற்படை. 'புலம்பி நுவலும் குயில் – தன் காதலனை நினைந்து புலம்பியபடி கூவியிருக்கும் குயில்'.

விளக்கம் : இளவேனித் காலம் காமத்தை மிகுவிப்பது. ஆதலினாலே, குயிலின் கூவுதலைக் கேட்டதும்' அழுந்துபடு விழுப்புண் பட்டாரைப் போலத் தலைவி துன்புற்றனள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/192&oldid=1687553" இலிருந்து மீள்விக்கப்பட்டது