பக்கம்:நற்றிணை 1.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202

நற்றிணை தெளிவுரை


[(து–வி.) பொருளீட்டுதலை மேற்கொண்டானாகத் தலைவியைப் பிரிந்து செல்பவனாகிய தலைவன், இடைவழியில் தலைவியை மறக்கவியலாது கவலும் தன் நெஞ்சிற்குக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது]

ஒன்று தெரிந்து உரைத்திரின்—நெஞ்சே! புன்காற்
சிறியிலை வேம்பின் பெரிய கொன்று
கடாஅம் செருக்கிய கடுஞ்சின முன்பின்
களிறுநின்று இறந்த நீர்அல் ஈரத்துப்
பால்அழி தோல்முலை அகடுநிலம் சேர்த்திப் 5
பசிஅட முடங்கிய பைங்கட் செந்நாய்
மாயா வேட்டம் போகிய கணவன்
பொய்யா மரபின் பிணவுநினைந்து இரங்கும்
விருந்தின் வெங்காட்டு வருந்துதும் யாமே;
ஆள்வினைக்கு அகல்வாம் எனினும் 10
மீள்வாம் எனினும் நீதுணிந் ததுவே.

நெஞ்சமே! புல்லிய கம்புகனிற் சிற்றிலைகளைக் கொண்டிருக்கும் வேம்பினது பெருங்கிளைகளை முறித்து, மதவெறியினாலே செருக்குற்றலைந்த, கடுங்கோபத்தையும் வலியையும் கொண்ட களிற்றியானையானது நின்று நீங்கிப்போயின இடத்தே தோன்றும், நீரற்றதான ஈரங்கொண்ட இடத்திலே, பாற்சுரப்புக் கழிந்துபோய்த் தோற்பட்ட முலையையுடைய தன் அடிவயிற்றை ஈரநிலத்தொடும் சேரவைத்துக் கொண்டதாய்ப் பசிநோய் வருத்துதலினாலே சோர்வுற்று முடங்கிக்கிடந்தது பசுங்கண்களையுடைய செந்நாய் ஒன்று. தப்பாத வேட்டையினைக் குறித்ததாகக் காட்டிடத்தே அதனை நீங்கிச்சென்ற அதன் கணவன், தன்பாற்கொண்ட அன்பிலே பொய்த்தலில்லாத மரபினையுடையதான தன் பிணவினை நினைந்ததாய்ப் பெரிதும் இரக்கங்கொள்ளும். இத் தன்மையுடைய புதுவழியான வெங்காட்டிடத்தே நின்று யாமும் அவளை நினைந்து வருந்துகின்றேம். பொருள் தேடுதலான முயற்சியினைக் குறித்து மேற்கொண்டு செல்வோம் என்றாலும், அல்லாதே அதனைக் கைவிட்டு இல்லிற்கே மீள்வோம். என்றாலும், நீ முடிவுசெய்தது எதுவோ அந்த ஒன்றனையே ஆராய்ந்து எனக்கும் கூறுவாயாக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/203&oldid=1688266" இலிருந்து மீள்விக்கப்பட்டது