பக்கம்:நற்றிணை 1.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

207


குட்டுவனது மேற்குமலையிடத்துச் கனைக்கண்ணுள்ள கரிய இதழ்களையுடைய குவளைமலர்களது வண்டுமொய்க்கும் பெருமலரைப்போல நறுநாற்றம் கமழும், அழகிய சிலவாக முடித்த கூந்தலையுடைய காதலியானவள் தீர்த்தற்கரிதான துன்பத்தைப் பொருந்துமாறு, நெடுத்தொலைவுக்குப் பிரிந்து செல்வதற்கும் துணிந்தனை. அத்தகைய நீதான் நெடிது வாழ்வாயாக!

கருத்து : 'பொருளாசை காட்டி அவளைப் பிரியச்செய்த நீதான். இடைவழியிலே அவளாசையை எழுப்பி என்னை நலிவிப்பதேனோ! அதனைவிட்டு என்னைப் பொருளின் பாலேயே செலுத்துக' என்பதாம்.

சொற்பொருள் : முளி – காய்ந்த. வலந்த – சுற்றிப் படர்ந்தேறிய. ஒளிர்சினை – விளங்கும் கிளைகள்; விளக்கம் விளங்கும் மலர்களால் வருவது. கவலை – கவர்த்த நெறி. குட்டுவன் – சேர நாட்டுள் ஒரு பகுதிக்கு உரியவன். குடவரை – மேற்கு மலை.

விளக்கம் : 'அவள் அரும்படர் உறுமாறு நெடுஞ்சேண் பட்டனை; இந்நாள் எனக்கேனும் உறுதுணையாகாதே அவள்பாற் செல்லலுற்றாயாய் என்னையும் கைவிட்டனை; இத்தகைய நீதான் வாழ்க' என்கின்றாள். 'கவலைய என்னாய்' என்றது, 'கவர்த்த வழிகளுள் எதனைப்பற்றிச் செல்வதென்பதைக் கருதாயாய்' என்றதாம். 'யானை கன்றொடு வருந்த' வழங்கும் கோடையைக் காண்பவனின் உள்ளத்தே, புதல்வனோடு தன்னை நினைந்தபடி துயருற்றுச் சாம்பி இல்லிடத்திருப்பவளான தலைவியின் நினைவு தோன்றுகின்றது. இலவம் கோடையிற் செந்நிறப் பூக்களுடன் தோன்றும் அழகினையும் செய்யுள் காட்டுகின்றது.

இறைச்சிகள்: (1) அழகனைத்தும் வீழத் தலைவி பிரிவின் தாக்குதலால் நலிவுற்றிருக்கும் நிலையை நினைப்பானாய், இலவத்தின் ஒளிர்சினை வீழ்ந்துபடக் காற்று வீசும் கொடுமையைக் கூறுகின்றனன்.

(2) புதல்வனைப் பெற்றிருக்கும் தலைவியைப் பேணாது பிரிந்துவந்த கொடுமையைக் கருதினனாய், அவளை நினைந்து, யானை கன்றொடு நின்று வருந்தும் வருத்தத்தைக் கூறுகின்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/208&oldid=1688285" இலிருந்து மீள்விக்கப்பட்டது