பக்கம்:நற்றிணை 1.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210

நற்றிணை தெளிவுரை


கொடிறுபோல் காய வால்இணர்ப் பாலை
செல்வளி தூக்கலின் இலைநீர் நெற்றம்
கல்லிழி அருவியின் ஒல்லென் ஒலிக்கும் 5
புல்லிலை ஓமைய புலிவழங்கு அத்தம்
சென்ற காதலர் வழிவழிப் பட்ட
நெஞ்சே நல்வினைப் பாற்றே; ஈண்டு ஒழிந்து
ஆனாக் கௌவை மலைந்த
யானே தோழி! நொய்ப்பா லேனே. 10

தோழீ! பெருத்த நகங்களைக் கொண்ட பிடியானது பிளந்து போட்ட நாரற்ற வெள்ளிய கிளைகள் பற்றுக் குறடுகளைப் போலக் காய்ந்து கிடக்க, வெள்ளிய பூங்கொத்துக்களையுடைய வெள்ளிலைப் பாலை மரமானது. செல்லுந்தொழிலதான காற்று அசைத்தலினாலே தன்னிடத்துள்ள இலைகளற்றுப்போய்க் காணப்படும். தன் நெற்றுக்களை, மலையிடத்திருந்து வீழ்கின்ற அருவியைப்போல ஒல்லென்ற ஒவியுடன் ஒலித்துக் கொண்டுமிருக்கும், புல்லிய இலைகளைக் கொண்ட ஓமை மரங்களைக் கொண்டதும், புலியினது நடமாட்டத்தைக் கொண்டதுமான அத்தகைய காட்டு வழியிலே சென்றவரான நமது காதலரது வழியிடத்தேயே, தானும் தொடர்ந்து போயினதான நம் நெஞ்சமே நல்வினைப் பேற்றைப் பெற்றதாகும். இவ்விடத்தேயாக அவரை நீங்கிக் கிடந்து, அடங்காத பழிசொற்களால் சூழப்பெற்ற யான் மட்டுமே நோய்ப்பட்டுத் தீவினைப் பாலினள் ஆயினேன். இதனை நினைக்குந்தோறும் யான் நகுவேன்!

கருத்து : 'எனதான நெஞ்சமும் என்னைக் கைவிட்டு அவரோடு சென்றது; இனி யான் எங்ஙனம் உய்வேன்?' என்றதாம்.

சொற்பொருள் : வள்உகிர் – பெரிதான நகம். கொடிறு –குறடு. செல் வளி – செல்லும் தொழிலதான காற்று. செற்றம் - நெற்று, கௌவை – பழிச்சொல்; 'இவள் நலியத் தீவினையாற்றிளான் கொடியனே காண்' என்றெழும் சொல். 'நோய்' என்றது பிரிவினாலே வந்தடைந்த காமநோயினை.

விளக்கம் : தன்னையும் தன் நெஞ்சையும் வேறுபடுத்தி, 'நெஞ்சம் நல்வினையாற்றும்' எனவும், 'தான் தீ வினையாட்டி' எனவும் கூறும் காதற்பாங்கு சிறப்புடையதாகும். வெட்பாலை, யா ஆகிய மரத்தின் பட்டைகளை உரித்துத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/211&oldid=1703964" இலிருந்து மீள்விக்கப்பட்டது