பக்கம்:நற்றிணை 1.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

243


மாட்டேன். ஈங்கையின் முகையும் புனமல்லிகையின் மலரும் மணல் மேட்டினிடத்தே உதிர்ந்து கிடப்பனவாம். மானினத்தின் வலிய குளம்புகள் மிதித்து அழுத்துமையினாலே அவை சிதையும் வெள்ளியைக் குறையிலிட்டு உருக்குதற்கமைந்த கொள்கலத்தைப்போலக், காண்பார்க்கு விருப்பஞ் செய்யும்படியாக அவற்றினின்றும் தெளிவான நீர் குமிழியிட்டு வடியும். அவை தண்ணீரைப் பெற்றுநின்ற பொழுதாகிய கூதிர்ப்பருவமாகிய அதுவும் வந்துவிட்டது. ஐயனை! இது காலை எம்மைத் தனித்து உறையவிட்டு நீதான் நீங்காதிருப்பாயாக!

கருத்து : 'நீ பிரியின் நின் காதலியும் இறந்துபடுவாள்' என்பதாம்.

சொற்பொருள் : புலம்பு – தனிமைத் துயரம். புன்கண் – சிறுமை. ஈங்கை – ஈங்கைச் செடி. அதிரல் – புனமல்லிகை. நெளவி – மான். ததைஇ – பெற்று.

விளக்கம் : அன்றிலானது இணையுள் ஒன்றை ஒன்று பிரிந்த காலத்துப் பெரும் புலம்புகொண்டு கூவிக் கூவி இறந்துபடும். அவ்வாறே பிரிவைத் தாங்காத தலைவியும் நைந்துபுலம்பி இறந்துபடுவாள் என்பதாம். தலைவிகூற்றைத் தன் கூற்றாகக் கொண்டு தோழி கூறுவது இது. உதிர்ந்த மலர்கள் மான்குளம்பால் மிதிபட்டு அழிதலுறுதலைப் போலப் பிரிந்துறையும் தலைவியும் வாடைக்கு ஆற்றாளாய் நலிந்து அழிவள் என்பதுமாம். மயங்கி இன்புற்று வாழுங்காலத்துத் துயர்செய்யாத கூதிர் பிரிவின் வாட்டத்தால் நலிவுற்றிருக்கும் காலத்துக் கொடிதாக வருத்திச் சாகடித்துவிடும் என்று கூறுவாள்; அதன் வரவைக் கூறி, அவன் பிரிவைக் கைவிடுதற்கு வேண்டுகின்றாள்.

125. மெல்லச் செல்வர்!

பாடியவர் : ......
திணை : குறிஞ்சி,
துறை: வரைவு நீட்டிப்ப ஆற்றாளாய தலைவியைக் தோழி வற்புறுத்தியது.

[(து–வி) தலைவன், வரையாது, இரவுங் குறியிடைத் தலைவியைப் பெற்று இன்புறுதலே சுருத்தினனாக ஒழுகி வருகின்றான். அதனை நினைத்து வருந்தும் தலைவிக்கு, அவன் அவளை விரைந்து வந்து மணந்துகொள்வான் எனக் கூறி, அவ் வருத்தத்தை மாற்றுதற்கு முயலுகின்றாள் தோழி.]

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/244&oldid=1692147" இலிருந்து மீள்விக்கப்பட்டது