பக்கம்:நற்றிணை 1.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

270

நற்றிணை தெளிவுரை


பெருமை கொண்ட நெஞ்சமே! கடனீரை முகந்துகொண்டு எழுந்து வருகின்ற கார்மேகமானது, மேற்கு மலையிடத்தே கவிந்து மழையினைப் பொழியும். சிறுசிறு கிளைகளிலே பூங்கொத்துக்களைக் கொண்டு விளங்கும் பெருந் தண்மையினைக் கொண்ட சந்தனமரங்கள், அதனால் தழை மிகுந்தவாயிருக்கும். அந்தச் சந்தனத் தேய்வுடன் பற்பல நறுமணப் பொருட்களையும் வகைபடச் சேர்த்து ஊட்டிய கூந்தலைத் தகைமைபெற வாரிக் கொள்பவர் பெண்கள். அந்தச் சாந்தமானது காய்ந்தவிடத்து உதிர்க்கப்பட்ட துகள்படிந்த கூந்தலையும் பெரிதான கண்களையும் உடையவர் தலைவியின் தோழிப்பெண்டிர்கள். அவர்கள் உவப்படையுமாறு தன் தந்தையது நெடிய தேரானது செல்லுகின்ற சிறப்பையுடைய நிலவுபோன்ற வெண்மணல் விரித்துக்கிடக்கும் முற்றத்திடத்தே, பந்தோடும் விளையாடுதற்குச் செல்லுகின்ற தலைவி, நம்மேல் அன்பற்றவளாயினாள். அவள் நமக்கு அருளிச் செய்பவளானாலும், அருளாதாள் ஆயினும், பெரிதும் மனச்செருக்கு அழிந்தனையாய் இரந்து வழிபட்டு நிற்றலை மட்டும் வெறுக்காதே கொள். யானடைந்த இந்தக் காமநோயாகிய போக்கற்கரிய துயரத்திற்கு அதனைப் போக்கும் மருந்தாக அமையக் கூடியவள் அவளேயன்றிப் பிறிது யாரும் இல்லை. ஆதலின், நீதான் தளர்தல் கூடாது காண்!

கருத்து : 'இனியும் வேண்டுதலைத் தொடர்வாயாக' என்பதாம்.

சொற்பொருள் : கொண்டல் – கடனீரை முகத்து எழுவதாகிய மேகம்; கீழ்க்காற்றுமாம். குடகு – மேற்கு. குழைத்து – தழைத்த. இணர – பூங்கொத்துக்களையுடைய. துகள் – பொடி. கூழை – கூந்தல், பரிவு – அன்பு. பின்னிலை - இரந்து பின்னிற்றலை.

விளக்கம் : 'தன் நோய்க்குத் தானே மருந்தாவாள்: ஆதலின், தோழியின் மறுப்பிற்குத் தளர்ந்து திரும்பாது இனியும் இனியும் முயன்று நோய்க்குரிய மருந்தினை அடைதற்கு முயலுக' என்கின்றான். நிலவு மணல் முற்றம் –நிலவனைய மணல் பரப்பித் கிடக்கும் முற்றம்; நிலவொளி பரக்கும் முற்றமும் ஆம். 'பெருங்கண் ஆயம்' என்றது, அவளையே நோக்கியபடி கண்ணாற் காத்திருக்கும் ஆயம் என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/271&oldid=1693327" இலிருந்து மீள்விக்கப்பட்டது