பக்கம்:நற்றிணை 1.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

274

நற்றிணை தெளிவுரை


மழை காலிட்டுப் பொழிவதாய்ச் சொரிந்த, வளமான பெயலினது இறுதிநாளிலே, கையிற் கொண்ட பலவான காலிட்டுப் பின்னிய மெல்லிய உறியும் தீக்கடைகோலும் இட்டுவைத்த தோற்பையினை ஒருசேரச் சுருக்கிக் கட்டிப் பனையோலைப் பாயினோடும் முதுகிற் கட்டியிட்ட பால்விலை பகர்வோனாகிய இடையன், நுண்ணிய பலவாகிய மழைத்துளிகள் தன்மேனியின் ஒரு பக்கத்தை நனைப்பத் தண்டினை ஊன்றி, அதன்மேல் ஒரு காலை மடித்து வைத்தபடியே ஒடுங்கி நின்றவனாக, வாய்குவித்து ஊதும் வீளையொலியானது, சிறிய தலையை உடையவான யாட்டின் தொகுதிகளைப் பிறபுலம் போகாவாறு மயங்கச் செய்து, அவ்விடத்தேயே தங்கியிருக்கச் செய்யும் காட்டுப்பகுதியின்கண் இருப்பதுமாகும்!

கருத்து : 'இரவுப்போதுக்குள் ஊருக்குச் சென்றடைதல் வேண்டும்' என்பதாம்.

சொற்பொருள் : வயங்கு பெயல் – விளங்கும் பெயல். பாணிகொண்ட – கையிடத்துக் கொண்ட. பல்கால் – பலவாகக் காலிட்டுப் பின்னிய ஞெலிகோல் – தீக்கடை கோல். பறிப்புறத் திட்ட – பனையோலைப் பாயினை முதுகின் கண்ணே இட்டுக்கொண்ட. விளி – வீளையொலி. முல்லை - இல்லொழுக்கம்.

விளக்கம் : கார்காலத்தின் தொடக்கத்திற்கு முன்பேயே வருவதாகக் கூறிப் பிரிந்தவனாதலின், அதன் கடைநாளும் வந்துற்றதனை, இடையனது குளிரால் நடுங்கியிருக்கும் நிலைபற்றி உரைப்பதனாலே உணர்த்துகின்றான். இதனால் தலைவியது பெருந்துயரமான நிலையையும் நினைந்து வருந்தினன் எனலாம். 'அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும். முல்லை சான்ற கற்பின்' என்றது. இரவுப் பொழுதாயினுங்கூட. வீட்டை அடைந்ததும் நல்ல விருந்தயர்தல் வாய்க்கும் என்றதாம். இரவினும் அவன் கண்ணுறக்கமின்றிக் காத்திருப்பாள் என்பதுமாம்.

உள்ளுறை : 'குளிரான் நடுங்கினும், இடையனது வீளையொலிக்குக் கட்டுப்பட்டவாய் யாட்டினம் எல்லை கடவாது நிற்றலைப் போன்று. பிரிவினாலே வருந்தினும் தன் சொற்குக் கட்டுப்பட்டாளாய்த் தலைவியும் ஆற்றியிருப்பாள் ஆவள்' என்பதாம். 'புறபுலம் புகுதாது யாட்டினத்தை ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/275&oldid=1693356" இலிருந்து மீள்விக்கப்பட்டது