பக்கம்:நற்றிணை 1.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

296

நற்றிணை தெளிவுரை


நெஞ்சம் அவர்வயின் சென்றென ஈண்டுஒழிந்து
உண்டல் அளித்துஎன் உடம்பே விறல்போர்
வெஞ்சின வேந்தன் பகைஅலைக் கலங்கி
வாழ்வோர் போகிய பேர்ஊர்ப்
பாழ்காத் திருந்த தனிமகன் போன்றே.

கீழைக் கடலினிடத்தே நீரை முகந்துகொண்டு, மேற்றிசைக் கண்ணே சென்று இருண்டு, அணுச்செறிந்த இந்த உலகமானது இருட்சியினின்றும் விடுபட்டு விளக்கம் அடையுமாறு, கம்மியர்கள் செப்புப்பானையைக் கடையுங் காலத்தே எழுகின்ற பொறிகளைப்போல மின்னலிட்டு, எங்கும் தன் தொழிலாகிய பெய்தலை மேற்கொள்ளும் இனிய இடிக்குரலைக் கொண்ட மேகம்; அம் மேகமானது, தன் தொழிலை முடித்த பின்னர்த் தென்புலப் பக்கமாகச் சென்று ஒழிவெய்தும். அதுபோல, என் நெஞ்சமும் 'அவர்பாற் சென்றதனாலே, இவ்விடத்தே என் உடம்பும் உண்ணுதலாலே காக்கப்படும் ஒரு தன்மைத்தாய் ஆகிவிட்டது. வெற்றிப்போர் செய்தலிலே வல்லவனான வெஞ்சினத்தையுடைய வேந்தனது பகைப்படை வந்து வருத்துதலினாலே கலங்கி, ஊரிடத்தே வாழ்வோரான பலரும் வெளியேறிப் போகிய பேரூரின் பாழிடத்தைக், காவல்காத்து நின்றிருக்கும் ஓர் தனியான வீரனைப் போன்று. உயிர்ப்பு ஒடுங்கிப் பாழ்பட்ட என் உடலையும், உணவானது இதுகாலையில் அழிவடையாதே காத்து நிற்கின்றதே!

கருத்து : 'என் உடலும் இனி அழிந்துபோகும்' என்பதாம்.

சொற்பொருள் : குணகடல் – கீழைக்கடல், இருளி – இருண்டு: கார்மேகமாகி. இன்குரல் – இனிதான குரல்; குரல் இனிதானது அது தலைவனின் வருகைக்கு உரித்தான கார்காலத்தை அறிவித்தலால் பாழ் – பாழிடம்; வாழ்வோர் போகியதால் பாழ்பட்ட ஊர் பாழிடம் என்று சுட்டப் பெற்றது.

விளக்கம் : முகந்து, இருளி மின்னித் தன் தொழிலாற்றிய மேகமானது, இறுதியிலே தென்புல மருங்கிற்சென்று அற்றுப் போயினாற்போலக், கண்டு காதலித்துக் கூடியின்புற்ற உடலும், நெஞ்சத்தைப் போகவிட்டுத் தான் இல்லாது போகும் நிலையதாயிற்று என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/297&oldid=1694848" இலிருந்து மீள்விக்கப்பட்டது