பக்கம்:நற்றிணை 1.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

308

நற்றிணை தெளிவுரை


ஐம்பால் வகுத்த கூந்தல் செம்பொறித்
திருநுதல் பொலிந்த தேம்பாய் ஓதி
முதுநீர் இலஞ்சிப் பூத்த குவளை
எதிர்மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரிமதர் மழைக்கண் காணா ஊங்கே. 10

விரைய எதிர்ப்பட்டுத் தோன்றிய தித்தியை உடையவள்; எழுச்சிகொண்ட இளைதான அழகிய முலைகளைக் கொண்டவள்: அவற்றின்பால் அள்ளித் தெளித்தாற்போல விளங்கும் அழகிய நுண்மையான தேமற் புள்ளிகளையும் பெற்றுள்ளவள்; ஐம்பகுதியாக வகுத்து முடிக்கப்பெற்ற கூந்தலைக் கொண்டவள்; சிவந்த புள்ளிகளைக் கொண்ட அழகிய நெற்றியிடத்தே அழகுறப் படிந்த தேன்பாய்கின்ற ஓதியைப் பெற்றிருப்பவள்; நாட்பட்ட நீரினைப்பொருந்திய பொய்கையிலே பூத்திருக்கும் குவளை மலர்களை எதிர் எதிராக வைத்துத தொடுத்தாற்போன்ற, செவ்வரிபரந்த மதர்த்த கண்களை உடையவள்; இவள்! இவள் கண்களைக் காண்பதன் முன்பாக நயனும், நண்பும், நாணம் நன்றாக உடைமையும், பயனும், பண்பும், பாடறிந்து ஒழுகுதலும் ஆகிய எல்லாமே நும்மினுங் காட்டில் அறிந்தொழுக வல்லவனாக யானும் இருந்தேன்! இவளைக் கண்டதன் பின்னர், அனைத்துமே இழந்தேன்; இனி இரங்கிப் பயன்யாது கொல்லோ?

கருத்து : 'இனி அவளை அடைதல் ஒன்றே நின்னாற் செயத்தகுவதான ஒரு காரியம்' என்பதாம்.

சொற்பொருள் : நயன் – நற்பண்பு: அனைவருடனும் கலந்து பழகும் நயப்பாடு நண்பு – அடைந்தாரது நட்பைப் போற்றலும், பகைத்தாரை வசப்படுத்தி நட்பாக்கலும், நாணம் – தகுதியிற் குறைந்தன செய்தற்கு முற்படாவாறு தடுக்கும் குணம். பயன் – ஈத்து உவத்தல். பண்பு – நன்மை தீமையறிந்து ஒழுகுதல். பாடறிந்து ஒழுகுதல் – உலக வழக்கத்தை அறிந்து ஒழுகுதல். தித்தி – அடிவயிற்றுப் பகுதியில் தோன்றும் அழகுத் தேமல். சுணங்கு – முலைகளிடைத் தோன்றும் பொன்னிறப் புள்ளிகள். ஏர் – அழகு; எழுச்சி. வனமுலை – வனப்புக்கொண்ட முலைகள். விதிர்த்தல் – தெளித்தல். ஓதி – கூந்தல்; கூந்தல்ஓதி - இருபெயர் ஒட்டு. முதுநீர் – முதிர்ந்த நீர். இலஞ்சி – பொய்கை, அரி – செவ்வரி, சிவப்பான இரேகைகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/309&oldid=1694887" இலிருந்து மீள்விக்கப்பட்டது