பக்கம்:நற்றிணை 1.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

319


166. கடலினும் பெரிது!

பாடியவர் : ......
திணை : பாலை
துறை : செலவுக்குறிப்பினால் வேறுபட்ட கிழத்திக்குத் தலைவன் சொல்லியது.

[(து–வி.) தலைவன் வினைமேற்கொண்டானாய்த் தன்னைப் பிரிந்து செல்லற்கு நினைத்தானாதலைக் குறிப்பால் உணர்ந்து, அதனால் உடல் வேறுபட்டாள் தலைவி. அவளுக்குத் தலைவன் கூறுவதாக அமைத்த செய்யுள் இது.]

பொன்னும் மணியும் போலும் யாழநின்
நன்னர் மேனியும் நாறிருங் கதுப்பும்
போதும் பணையும் போலும் யாழநின்
மாதர் உண்கணும் வனப்பின் தோளும்
இவைகாண் தோறும் அகம்மலிந்து யானும் 5
அறம்நிலை பெற்றோர் அனையேன் அதன்தலை
பொலந்தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன்
வினையும் வேறுபுலத்து இலெனே; நினையின்
யாதனின் பிரிகோ? மடந்தை!
காதல் தானும் கடலினும் பெரிதே! 10

மடந்தையே! நின் நல்லழகு கொண்ட மேனியானது பொன்னைப்போன்று ஒளிவீசுவதாய் இருக்கின்றது. நின் மணங்கமழும் கரிய கூந்தலும் நீலமேனியைப் போல ஒளியுடைத்தாயிருப்பது. அழகிய மையுண்ட நின் கண்கள் குவளைப் போதினைப்போல விளங்குகின்றன; வனப்பு உடையவான நின் தோள்களோ மூங்கிற் போத்தினைப்போலத் தோன்றுவன. இவற்றைக் காணுந்தோறும் யானும் உள்ளம் மகிழ்ந்தேன். அறத்தினிடத்தே நிலைபெற்றார் கொள்ளும் மனக்களிப்பினையும் உடையனாயிருதேன், அதன் மேலும் பொற்றொடி அணிந்தோனாகிய நின் புதல்வனும் பொய்தல் விளையாட்டினை ஆடுதற்குக் கற்றனன் ஆயினன். யான் செய்தற்குரியவொரு செயலும் வேற்று நாட்டிடத்தாக யாதொன்றும் இல்லை. நினையின், எதுகுறித்து யானும் பிரியப் போகின்றேன்? நின்பால் தான் கொண்ட காதலும் கடலைக் காட்டினும் பெரிதாகுமே! ஆதலின், நீதான் என்னைத் தவறாக நினைத்து உடல் வேறுபடுதலைக் கைவிடுவாயாக!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/320&oldid=1696095" இலிருந்து மீள்விக்கப்பட்டது