பக்கம்:நற்றிணை 1.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

320

நற்றிணை தெளிவுரை


கருத்து : 'யான் பிரிந்து போதற்கு நினைத்திலேன்: ஆதலின், நின் மனத்தளர்வை கைவிடுக' என்பதாம்.

சொற்பொருள் : 'யாய்' என்பது முன்னிலை அசை. மாதர் – அழகிய. அகம் மலிந்து – உள்ளம் மகிழ்ந்து. அதன்தலை – அதற்கும் மேலாக. நினையின் – ஆராயின், பொய்தல் – ஒருவகை மகளிர் விளையாட்டு; இதனைக் 'கண்ணாமூச்சி' என்று இக்காலத்தே வழங்குகின்றனர்.

விளக்கம் : உடல் வேறுபட்டாளை இவ்வாறு பாராட்டிக் கூறித் தெளிவிக்கின்றான் தலைவன். பொருள் ஆசையாற் பிரிவானென ஐயுற்றதன் பொருந்தாமையினைக் கூறுவான், 'பொன்னும் மணியும் மேனியும் கதுப்புமாக நின்னிடத்தேயே அமைந்து கிடக்கின்றனவே' என்கின்றான். அறம் நிலை பெற்றோர் அனையேன் என்றது, அறத்திற்கான பொருள் முட்டுப்பாடு தனக்கு இல்லாமையினைக் கூறியதாம்.

மேற்கோள் : பிரிவின் எச்சத்துப் புலம்பிய மனையாளைப் பிரிவுநீக்கிய பகுதிக்கண் தலைவன் சொல்வதற்கு இச்செய்யுளை இளம்பூரண அடிகள் மேற்கோளாகக் கொண்டனர் (தொல்; பொருள் 144ஆம் சூத்திரம்). 'அஃதாவது பிரியேன் என்றல்' எனவும் அவர் உரைப்பர்.

பிறபாடங்கள் : போதும் மணையும் போலும்: யாதெனிற் பிரிவாம் மடந்தை.

167. பசப்பினைக் களையா!

பாடியவர் :
திணை : நெய்தல்.
துறை : தோழி பாணற்கு வாயில் மறுத்தது; தூதொடு வந்த பாணற்குச் சொல்லியதூஉம் ஆம்.

[(து–வி) (1) பரத்தையிற் பிரிந்த தலைவனின் பொருட்டாகத் தலைவிபால் தூதுவந்த பாணனிடம், தலைவியின் நிலையைத் தோழி கூறிப் போக்குவது இது. (2) வினைவயின் சென்ற தலைவனின் வருகையை அறிவித்து முற்பட வந்த பாணனுக்குத் தோழி சொல்வதாக அமைந்ததூஉம் ஆம்.]

கருங்கோட்டுப் புன்னைக் குடக்குவாங்கு பெருஞ்சினை
விருந்தின் வெண்குருகு ஆர்ப்பின் ஆஅய்
வண்மகிழ் நாளவைப் பரிசில் பெற்ற
பண் அமை நெடுந்தேர்ப் பாணியின் ஓலிக்கும்
தண்ணந் துறைவன் தூதொடும் வந்த 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/321&oldid=1696096" இலிருந்து மீள்விக்கப்பட்டது