பக்கம்:நற்றிணை 1.pdf/323

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

322

நற்றிணை தெளிவுரை


விளக்கம் : 'குடக்கு வாங்கு பெருஞ்சினை' என்றலால், இச்செய்யுளைச் செய்தவர் ஆய்நாட்டின் கிழக்குத் திசையிலே உள்ளவரென்பதும், ஆயிடம் சென்று பரிசில் பெற்றவருள் ஒருவரென்பதும் விளங்கும். 'நாளவைப் பரிசில் பெற்ற' என்பது. அரசர்கள் பரிசில் வழங்குதல் தம் நாளவைக்கண் இருந்தே என்பதனையும் காட்டும். 'பயன்' ஏழிசையின் சுறுபாடுகள்; 'பயன்தெரி பனுவல்' என்றது, யாழிசை நுணுக்கங்களைக்குறித்த நூற்களாம். 'கானலிடத்து மாண்நலம் இழந்த' தன்மை கூறியது, முதற்களவுக் கூட்டத்தின் நிகழ்விடத்தைச் சுட்டியதாம்.

இறைச்சிகள் : (1) ‘நாரை நரலுதல் தேர்ப்பாணியின் ஒலிக்குமென்பது, பாணனின் பணிமொழி தானும் தலைவனின் அருண்மைத் தோன்றக் கேட்பதாகும்' என்பதாகும்.

(2) ஞாழற்பூவும் புன்னைப்பூவும் விரவிய மணத்தையுடைய கானல் என்றது, அவ்வாறே தலைவியையும் பரத்தையையும் ஒப்பக் கருதும் மனநிலையினன் தலைவனாயினான என்றதாம்.

இவற்றால் தலைவியது ஆற்றாமை மிகுதியை உரைத்துத் தலைவனை அவளும் ஏற்பாள் என்ற கற்புச் செவ்வியையும் புலப்படுத்தினளாம்.

168. பண்பெனப் படுமோ!

பாடியவர் :
திணை : குறிஞ்சி.
துறை : தோழி இரவுக் குறி மறுத்தது.

[(து–வி.) இரவுவேளையிலே தலைவன் வருதலால், வழியிடையே உண்டாகும் ஏதப்பாடுகளை நினைந்து, அதனை விளக்கித் தலைவியை அவன் மணம் புரிந்துகொள்ளுதலை மேற்கொள்ளுமாறு செய்தற்கு நினைக்கின்றான் தோழி. அதனால், தலைவனிடம் இவ்வாறு உரைக்கின்றனள்.]

சுரும்புண விரித்த கருங்கால் வேங்கைப்
பெருஞ்சினைத் தொடுத்த கொழுங்கண் இறாஅல்
புள்ளுற்றுக் கசிந்த தீம்தேன் கல்லலைக்
குறக்குறு மாக்கள் உண்ட மிச்சிலைப்
புன்தலை மந்தி வன்பறழ் நக்கும் 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/323&oldid=1696905" இலிருந்து மீள்விக்கப்பட்டது