பக்கம்:நற்றிணை 1.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

323


நன்மலை நாடர் பண்புஎனப் படுமோ
நின்நயந்து உறைவி இன்னுயிர் உள்ளாய்
அணங்குடை அரவின் ஆர்இருள் நடுநாள்
மைபடு சிறுநெறி எஃகுதுணை ஆக
ஆரம் கமழும் மார்பினை;
சாரற் சிறுகுடி ஈங்குநீ வரலே? 10

கரிய அடியையுடைய வேங்கையின் பெரிய கிளையிலே வண்டுகள் உண்ணும்படியாக மலர்கள் இதழவிழ்ந்தவாய் நிரம்பியிருந்தன. அவ்விடத்தே கொழுலிய கண்களையுடைய தேனிறாலைத் தேனீக்கள் தொடுத்திருந்தன. அத் தேனிறால்கள் வண்டுகள் மொய்த்தலாலே கசியத் தொடங்கின. கசிந்து கல்லின்குழிகளிலே வழிந்த இனிய தேனைக் குறவரின் இளமகார் வழித்து உண்டனர். அவர்கள் உண்டு எஞ்சியதை மெல்லிய தலையையுடைய மந்தியின் வலிய குட்டிகள் தாமும் சென்று நக்குதலைச் செய்யும். இத்தகைய நன்மையுடைய மலைநாடனே! நின்னை விரும்பியவளாக இவ் விடத்தே தங்கியிருக்கும் தலைவியின் இனிய உயிரானது படுகின்ற வேதனையை நினைந்தாயல்லை. அச்சத்தைத் தரும் பாம்புகள் திரிதலையுடைய இருள்மிகுந்த இரவின் நடுயாமப் பொழுதிலே, மயக்கத்தினைத் தருகின்ற சிறுவழியினூடே நின் கைக்கொண்ட வேலே நினக்குத் துணையாக நீ வருகின்றனை! சந்தனத்தின் மணங்கமழுகின்ற மார்பினை உடையையாய்ச் சாரலிடத்துள்ள எம் சிறுகுடிக்கு நீதான் வருதலை உடையாய்! அதுதான் நினக்குப் பண்பு என்று சொல்லத்தகுந்த ஒரு செயலாகுமோ?

கருத்து : 'இரவின்கண் வருதலைக் கைவிட்டுவிட்டு இவளை மணந்துகொள்ளுதலிலே மனஞ் செலுத்துவாயாக!' என்பதாம்.

சொற்பொருள் : சுரும்பு – வண்டு. புள் – வண்டு. அளை – கல்லிடத்துக் காணப்பெறும் குழிகள். குறுமாக்கள் – சிறுவர், பண்பு – தகுதிப்பாடு. அணங்கு – அச்சம். மை – மயக்கம். எஃகு - வேல். ஆரம் – சந்தனம்.

விளக்கம் : 'நீ தனியே இரவின்கண் வருகின்றனை; வழியிடையே நினக்குத் துன்பமுண்டாகுயோ எனக் கருதி இவள்தான் வருந்தி உயிர் நலிவாள்! இவளுயிர் காக்கப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/324&oldid=1696906" இலிருந்து மீள்விக்கப்பட்டது