பக்கம்:நற்றிணை 1.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

353


'காப்போர் நீத்த களிறு போல்வான்' என்றது. மூத்தோர்க்கு அடங்கி நடப்பவனாயின், வரைந்து கொள்ளுமாறு வற்புறுத்தப்பட்டிருப்பான்; அஃதன்றிக் களவையே நாடுதலால் 'காப்பார் நீத்த களிறுபோலத் தன் மனப்போக்கின்படியே எதிர்விளைவுகள் எவற்றையும் கருதிப் பாராதே நடப்பானாயினான்' என்பதாம்.

மேற்கோள் : 'நன்னயம் பெற்றுழி நயம்புரி இடத்தினும் தோழிக்குக் கூற்று நிகழும்' என்பதற்கு இச்செய்யுளை எடுத்துக் காட்டுவர் இளம்பூரண அடிகள். களவொழுக்கம் நிகழா நின்றுழித் தலைவன் வந்தான் எனக் கூறியது எனவும் உரைப்பர் (தொல்–களவியல். சூ. 112); மெய்ப்பாட்டியலுள் 'இன்புறலாவது நட்டாராகிப் பிரிந்து வந்தோரைக் கண்டவழி வருவதோர் மனநிகழ்ச்சி போல்வது' எனக் கூறி; இச்செய்யுளின், 'கெடுத்துப்படுநன்கலம் எடுத்துக்கொண்டாங்கு' என்பதனையும் இளம்பூரணர் காட்டுவர்.

தொல்காப்பியக் களவியலுரையுள் (சூ. 114) இச்செய்யுளைக் காட்டி, 'இது. தலைவனைக் கண்டு முயங்குகம்வம்மோ" என்றது என்பர் நச்சினார்க்கினியர்(சூ. 114 உரை).

பாடபேதம் : நிற்புறம் காக்கும்

183. மடவை மன்ற!

பாடியவர் : ......
திணை : நெய்தல்.
துறை : வரைவிடை வைத்துப் பிரியும் தலைவற்குத் தோழி கூறியது.]

[(து–வி.) வரைவிடை வைத்துத் தலைவியைப் பிரிந்துபோகும் தலைவனிடத்தே, அவனைப் பிரியின் தலைவி உயிர் வாழ மாட்டாள் என்று கூறுவதன் மூலம், அவனை விரையத் திரும்பிவிடுமாறு தோழி இப்படிக் கூறுகின்றாள்.

தம்நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து
பிறநாட்டு உப்பின் கொள்ளை சாற்றி
நெடுநெறி ஒழுகை நிலவுமணல் நீந்தி
அவணுறை முனிந்த ஒக்கலொடு புலம்பெயர்ந்து
உமணர் போகலும் இன்னா தாகும் 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/354&oldid=1706386" இலிருந்து மீள்விக்கப்பட்டது