பக்கம்:நற்றிணை 1.pdf/363

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

362

நற்றிணை தெளிவுரை


[(து–வி.) தலைமகளைப் பகற்குறி வந்து கூடிய தலைமகன் தன்னூர்க்கு மீண்டுபோக, அப்பிரிவினாலே தலைவியின் மனத்துயரம் பெரிதாகின்றது. அவள் நெஞ்சழிந்தவளாகத் தனக்குள் இவ்வாறு கூறிப் புலம்புகின்றாள்.]

நெய்தல் கூம்ப நிழல்குணக்கு ஒழுகக்
கல்சேர் மண்டிலம் சிவந்துநிலம் தணியப்
பல்பூங் கானலும் அல்கின் றன்றே
இனமணி ஒலிப்பப் பொழுதுபடப் பூட்டி
மெய்ம்மலி காமத்து யாம்தொழுது ஒழியத் 5
தேரும் செல்புறம் மறையும் ஊரொடு
யாங்கா குவதுகொல் தானே தேம்பட
ஊதுவண்டு இமிரும் கோதை மார்பின்
மின்னிவர் கொடும்பூண் கொண்கனொடு
இன்னகை மேவிநாம் ஆடிய பொழிலே? 10

நெஞ்சமே! நெய்தலின் மலர்களும் குவியத் தொடங்கின; மரத்து நிழல்களும் கீழ்த்திசைக் கண்ணே விழுவனவாயின; மேற்குமலையைச் சார்கின்ற கதிர்மண்டிலமும் சிவப்புற்றதாய் நிலத்தின் வெப்பமும் தணியத் தொடங்கிற்று; பலவாய பூக்களையுடைய கானற்சோலையும் இருள்படர்கின்ற தன்மையதாய்த் தன் பொலிவு குன்றியுள்ளது; மெய்யிடத்தே மிகுதிப்பட்ட காமத்தையுடைய யாமும் இவ்விடத்தேயே தொழுதேமாய்க் கழிகின்றனம்; பொழுதுபடலும், மணயினம் ஒலிசெய்யக் குதிரைகள் பூட்டப்பெற்ற அவரது தேரும் தான் செல்லலுறும் பக்கத்தானும் நம்முடைய பார்வைக்கு, மறைவதாகின்றது. ஆதலால், இவ்வூருடனே, தேனைப் பொருந்த ஊதுகின்ற வண்டுகள் ஆரவாரித்தபடியிருக்கும் மாலையணிந்த மார்பினையுடையவனும், ஒளிசெய்யும் வளைந்த கலன்களை யுடையவனுமான தலைவனோடு இனிதாக நகைபொருந்த நாம் விளையாடியிருந்த பொழிலானதும் இனி நமக்கு எவ்வண்ணமாய துயரத்தைத் தருவதாகுமோ?

கருத்து : 'மாலைக்காலம் வந்துற்றதானால் எவ்வாறு துயரம் மிகுமோ?' என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/363&oldid=1706900" இலிருந்து மீள்விக்கப்பட்டது