பக்கம்:நற்றிணை 1.pdf/364

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

363


சொற்பொருள் : 'கல்' என்றது. மேற்றிசைக் குன்றத்தை. மண்டிலம் – ஆதித்த மண்டிலம், நிலம் தணிய – நிலத்தது வெப்பம் தணிய. இமிர்தல் –ஆரவாரித்தல், மின் – ஒளி, கொடும்பூண் – வளைந்த பூண்கள் . நகைமேவ – நகை பொருந்த; நகை – உவகை.

விளக்கம் : காதலன் வருகின்ற ஞான்று அவனை எதிர்தொழுது வரவேற்றலும், மீள்கின்றபொழுது புறந்தொழுது போற்றலும் தலைவியரின் இயல்பாகும். 'மெய்ம்மலி காமம்' என்றது, அவனைப் பிரிதலுற்ற அஞ்ஞான்றே பற்றிப் படர்ந்த பசலை மிகுதியை நோக்கி உரைத்ததாம். 'பல்பூங்கானல் அல்கின்று' என்றது, அவ்வாறே தன் எழிலும் அல்கிய தன்மையைச் சுட்டிக் கூறியதாம். இனி, 'ஊரும் பொழிலும் இன்னாதாகும்' என்பாள், 'ஊரொடு பொழிலே யாங்காவதுகொல்?' என்கின்றனள். 'மார்பின் மின்னிவர் கொடும்பூண்' எனலும் ஆம். 'மார்பிடத்தே மின்னொளி பரப்பும் வளைவான பூண்கள்' அவை என்க. தலைவனோடு உறவு கொள்ளுதற்கு முற்பட இனியதாயிருந்த ஊரும் பொழிலும் அவ்வுறவுக்குப் பின்னர் அவனைச் சிறுபொழுது பிரியலுறும் பொழுதிலே பெருந்துன்பத்தை தருபவாகின்றன. இதனால், அவனைப் பிரியாதே எப்போதும் கூடியிருக்கும் மணந்துகூடி வாழும் இல்லற வாழ்விலே தலைவியின் உள்ளம் முற்றவும் செல்லுகின்றதாதலும் நன்கு அறியப்படும். இதனை உணர்வானாகிய தலைவன், தன் முயற்சிகளை அவளை மணந்துகோடலை நோக்கிச் செலுத்தத் தொடங்குவான் என்பதாம்.

மேற்கோள் : 'பகற்குறிக்கண்... தலைவன் நீங்கியவழிக் கூறியது' என, இச் செய்யுளை 'நன்னயம் பெற்றுழி நயம்புரி இடத்தினும் தலைவிக்குக் கூற்று நிகழுதற்கு' இளம்பூரணர் எடுத்துக் காட்டுவர்.

பாடபேதங்கள் : மண்டிலம் சிவந்து சினந்தணிய; மின்னிவர் பெரும்பூண்.

188. நன்மையும் தீமையும்!

பாடியவர் : ........
திணை : குறிஞ்சி.
துறை : பகற்குறி மறுத்து வரைவு கடாயது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/364&oldid=1706901" இலிருந்து மீள்விக்கப்பட்டது