பக்கம்:நற்றிணை 1.pdf/365

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

364

நற்றிணை தெளிவுரை


[(து–வி.) பகற் பொழுதிற் கூடிச் செல்லும் ஒழுக்கத்தினனாகத் தலைவன் விளங்குகின்றான். அவனிடத்தே, தலைவியை மணந்து பிரியாதுறையும் இல்வாழ்வினைப் பற்றிய நினைவை எழச் செய்யக் கருதினளாய தோழி, இவ்வாறு சொல்லுகின்றாள்.]

படுநீர்ச் சிலம்பில் கலித்த வாழைக்
கொடுமடல் ஈன்ற கூர்வாய்க் குவிமுகை
ஒள்ளிழை மகளிர் இலங்குவளைத் தொடூஉம்
மெல்விரல் மோசை போலக் காந்தள்
வள்ளிதழ் தோயும் வான்தோய் வெற்ப 5
'நன்றி விளைவும் தீதோடு வரும்'என
அன்றுநற்கு அறிந்தனள் ஆயின் குன்றத்துத்
தேம்முதிர் சிலம்பில் தடைஇய
வேய்மருள் பணைத்தோள் அழியலள் மன்னே.

மலையின் நீர்வளமுடைய பக்கத்தே வாழைமரங்கள் முளைத்து வளர்ந்திருக்கும்; வாழையின் வளைவான மடலிடையே நின்றும் கூரிய முனையையுடைய குவிந்த முகையானது தோன்றும். ஒள்ளிய கலன்களை அணிபவர் பெண்கள்; அவர்களின் கைவளைகளைத் தொட்டபடியிருக்கும் மெல்விரலினிடத்தே விரலணிகள் அணிசெய்தபடி விளங்கும்; அவ் விரலணியைப் போலத் தோற்றுமாறு வாழையின் முகையானது வளவிய காந்தளின் மலரிதழிடத்தே சென்று தோய்ந்தபடியிருக்கும். வானைச்சென்று தடவுவது போல விளங்கும் அத்தகைய மலைக்கு உரியவனாகிய தலைவனே! ஒருவருக்குச் செய்யும் உபகாரத்தினாலே வந்தடையும் பயனானது பிரிந்து வருந்துவதனாலே நலனழியும். இங்ஙனமாகிய தீமையோடு வந்து முடியும் என்பதனை நின்னை முதற்புணர்ச்சியிற் கூடிய அன்றைப்பொழுதே நன்றாக இவள் அறிந்தனளாதல் வேண்டும். அங்ஙனம் அறிந்திருந்தனளாயின், குன்றிடத்துத் தேன் முதிர்ந்த பக்கமலையிடத்தே முளைத்தெழுந்துள்ள மூங்கிலையொத்த பருத்த இவள் தோள்களின் அழகெல்லாம் அழியப் பெற்றவளாக, இந்நாளிலே இவளும் இங்ஙனம் ஆகாள்காண்!

கருத்து : இவளை விரைய மணந்து கொண்டனையாய் இல்லறம் நிகழ்த்துதற்கு ஆவனவற்றை மேற்கொள்க' என்பதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/365&oldid=1706902" இலிருந்து மீள்விக்கப்பட்டது